100 நாளில் மக்கள் குறைகள் தீர்ப்பு.. மொத்தமாக உருவாகிறது "புதிய துறை".. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் மக்கள் வைத்த கோரிக்கை மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் புதிய துறை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். திமுக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஸ்டாலின் இன்று முதல் கையெழுத்தாக எந்த திட்டத்திற்கு அனுமதி அளிப்பார் என்று கேள்விகள் எழுந்தது. ஸ்டாலின் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பார் என்று கேள்விகள் எழுந்தன.
சபாஷ்.. 5 அதிரடி உத்தரவுகளில் ஸ்டாலின் கையெழுத்து.. அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதமே ரூ.2000
அதிரடி
இந்த நிலையில் முதல் நாளிலேயே 5 முக்கியமான கோப்புகளை கையெழுத்து போட்டு ஸ்டாலின் அசத்தி உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே திமுக தலைவர் ஸ்டாலின் தனது அதிரடியை காட்ட தொடங்கி விட்டார். இதில் ஸ்டாலின் கையெழுத்திட்ட முக்கியமான உத்தரவு என்றால் அது 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் தொடர்பானதுதான்.
திட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்று கூறினார். 100 நாட்களில் மக்களின் குறைகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
துறை
இதையடுத்து லட்சக்கணக்கில் ஸ்டாலினிடமும், திமுக நிர்வாகிகளிடமும் மனுக்கள் குவிந்தன. மக்கள் பலர் தங்கள் குறைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் தற்போது மக்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக தனி துறையே உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ்
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். இதற்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார். அடுத்த 100 நாட்களில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய துறையை ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.