இந்த ஆளுநரை தூக்கினால் தான் பாஜகவுக்கு நல்லது.. ஸ்டாலின் செய்தது சரியானது.. ஒரே போடாக போட்ட தினகரன்!
சென்னை : ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சரியானதே என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற்றால் மட்டுமே மத்திய பாஜக அரசுக்கு இங்கு நல்ல பெயர் கிடைக்கும். திமுக அரசின் மீது பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு ஆளுநரின் செயல்பாடு சாதகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் பேச்சை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. இந்த நிகழ்வு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள டிடிவி தினகரன், திமுக அரசு திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும், திமுக ஆட்சியின் அவலங்களை மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆளுநரின் செயல் வருத்தம் அளிக்கிறது
அப்போது பேசிய டிடிவி தினகரன், "தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக எந்த குடிமகன் செயல்பட்டாலும் அது தவறுதான். ஆளுநரின் இந்த நடவடிக்கை உண்மையில் வருத்தம் அளிக்கும் செயலாகத் தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆளுநர் கடிவாளம் போல் இருந்து செயல்படுவது தவறில்லை. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடாது. அது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு நல்லதல்ல.

ஆளுநரால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர்
தமிழ்நாடு என்ற பெயர் சரியில்லை, தமிழகம் தான் சரி என்று ஆளுநர் கூறுவது, மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போல் உள்ளது. மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற்றால் மட்டுமே மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் இருக்கும் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அவர்களின் செயல்பாட்டுக்கு உதவியாகவும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவும் செயல்படுவது தான் நன்றாக இருக்கும்.

திசைதிருப்ப பயன்படும் ஆளுநர்
ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலோ, அரசு தவறாக செயல்பட்டாலோ அதற்காக ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை. ஒரு பக்கம் ஆளுநர் இந்த ஆட்சிக்கு எதிராக இருக்கிறார், மற்றொரு பக்கம் ஆதரவாக இருக்கிறார். ஏனென்றால் 20 மாதங்களில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் மட்டுமே உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரசுக்கு எதிராக போராடும் போது அதை திசைதிருப்பும் விதமாக தமிழ்நாடு, தமிழகம் பேச்சு, சட்டப்பேரவை வெளிநடப்பு என தேவையில்லாமல் செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

மறைப்பதற்கு வாய்ப்பு
திமுக அரசின் மீது பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சாதகமாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எங்களைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் என்று கூறி வருகிறார். திமுக திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும் மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

ஸ்டாலின் செய்தது தவறே இல்லை
அரசியல் தலைவராக முதலமைச்சர் செய்தது தவறு இல்லை. ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சரியானதே. ஆளுநர் உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கும். அப்போதே அதனைத் திருத்தி அனுப்பி இருக்கலாம். அதைவிடுத்து ஆளுநர் அரசியல்வாதி போல் நடந்ததால் முதலமைச்சரும் அரசியல்வாதி போல் நடந்து கொண்டார். ஆக நேற்றைய சம்பவம் ஜனநாயகத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது." என தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications