ஜனாதிபதி + முதல்வர் பதக்கம்.. போலீஸ் - தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கி கவுரவித்த ஸ்டாலின்
சென்னை: போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான ஜனாதிபதி, மத்திய உள்துறை மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவித்தார்.
இந்தியா முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்கள், வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பணியில் மெச்சத்தகுந்த சேவை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயரிய விருதுகளான ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி காவல்துறை, தீயணைப்பு வீரர்களுக்கு குடியரசு தலைவர் பதக்கம், உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் மற்றும், தமிழ்நாடு முதலமைச்சர்கள் பதக்கம் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி பதக்கம் வெல்வோரின் பெயர்கள் என்பது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பதக்கம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதன்பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் வரவேற்று பேசினார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை ஒவ்வொரு போலீசாருக்கும் வழங்கி கவுரவித்தார். விழாவில் சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள், பதக்கம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications