யார் காலிலும் விழுவதற்காக நான் டெல்லி போகவில்லை.. ஈபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
சென்னை: யார் காலிலும் விழுவதற்காக நான் டெல்லிக்கு போகவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில் ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய செய்திகளை எல்லாம் நாம் பார்த்தோம்.
அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்பு பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்துவிடடார்கள். அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் - அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.

தாங்க முடியாதவர்கள்
அதையெல்லாம் மூடி மறைக்க - அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கின்றனர். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன்.

தமிழக உரிமைகள்
அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல - பதவியேற்றபோதே நான் சொன்னேன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்" என பேசினார்.

திமுக அலுவலக திறப்பு விழா
டெல்லியில் திமுக தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து தமிழகம் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்த முதல்வர் ஸ்டாலின், திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு அவர்களையும் அழைத்திருந்தார்.

டெல்லி பயணம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தன்னுடைய அறிக்கையில், "பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது காலில் விழ டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வருகின்றன என கடுமையாக விமர்சித்திருந்தார்.

துபாய் பயணம்
அது போல் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பினார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications