கோரிக்கை வைத்து ஜஸ்ட் ஒரே நாள் தான்.. அதற்குள் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்.. குவியும் பாராட்டுகள்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து ஒரு நாள்தான் ஆனது. அதற்குள்ளாக முதல்வர் ஆக்ஷனில் இறங்கியதால் மக்கள் பூரிப்படைந்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் வரும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார். இதனால் மக்கள் முன்பு அவருக்கு நற்பெயர் இருக்கிறது.
அது போல் சட்டசபையில் தன்னை அதிகம் புகழக் கூடாது. என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசினால் போதும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது பட்ஜெட் கூட்டத் தொடரில் நன்கு எதிரொலித்தது.

இடையூறு
அது போல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் தனது வாகனத்துடன் வரும் பாதுகாப்பு படையினரின் கான்வாய்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளார். இது போல் பொதுமக்கள் நலனில் அவர் அக்கறை எடுத்துக் கொள்வதாகவே இவரது செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.

ஆவடி பேருந்து நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் நரிக்குறவர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோர் தாங்கள் இந்த இனத்தை சேர்ந்ததால் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் சந்திக்கும் நிலை குறித்து விரிவாக பேசிய காணொலி வைரலானது.

3 மாணவிகளை சந்தித்த முதல்வர்
இதையடுத்து அந்த 3 மாணவிகளையும் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேசினார். அப்போது நரிக்குறவ சமூகத்தினரின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா மு நாசரிடம் ஆவடி நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
Recommended Video

நரிக்குறவ மக்கள் குடியிருப்பு
அதன்பேரில் அமைச்சர் ஆவடி நரிக்குறவ குடியிருப்புக்கு சென்றார். அங்கு அவரது செல்போனில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் வந்து நரிக்குறவ மக்களிடம் பேசினார். அப்போது ஆவடிக்கு இன்னும் ஒரு வாரத்தில் வருவதாக உறுதியளித்தார். அப்போது நரிக்குறவ பெண் ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து தங்கள் ஜாதியை எஸ்டி பிரிவிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

முதல்வர் உறுதி
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். கோரிக்கை வைத்து ஒரு நாள்தான் ஆனது. அதற்குள்ளாக நரிக்குறவர், குருவிக்காரர் ஜாதிகளை எம்பிசியிலிருந்து பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பிற்கு மாற்றித் தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தங்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அச்சமூகத்து மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications