கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா: பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் ஸ்டாலின் நன்றி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ 100 நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ 100 நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இன்று மாலை 6.50 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் கருணாநிதியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலிலும் இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி. தனக்கென தனி முத்திரை பதித்த கருணாநிதியின் இலக்கியம் மற்றும் அவரது படைப்புகள் மூலம் அவருக்கு கலைஞர் என்ற அன்பான பட்டம் கிடைத்தது ஒரு அரசியல் தலைவராக சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கோடிட்டு காட்டி பலமுறை பணியாற்றியவர்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது கருணாநிதியின் நினைவையும் அவரால் நிலை நிறுத்தப்பட்ட லட்சியங்களையும் போற்றும் வகையில் இருக்கும். இந்த தருணத்தில் கருணாநிதிக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலை நோக்கு பார்வை உதவும்.
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் பங்கு மகத்தானது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும் என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அது போல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: கலைஞரின் சமூக பார்வை லட்சக்கணக்கானோரை சுய மரியாதையுடன் வாழ வழி வகுத்தது. கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்றது என தெரிவித்திருந்தார். அவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications