5 வாரங்களில் 27 மடங்கு உயர்ந்த உடல் உறுப்பு தானம்! -ஸ்டாலின் சொன்னார்; மக்கள் செய்தார்கள்!
சென்னை: உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 27 மடங்கு அதிகரித்துள்ளது.
அட! அப்படியா? அதற்கு என்ன காரணம் என்கிறீர்களா? வேறு என்ன முதல்வர் ஸ்டாலின் அறிவித்தே ஒரே ஒரு அறிவிப்பால் இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

கடந்த மாதம், 'இறக்கும் முன்னதாக உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்தார்.
அவரது அறிவிப்பு வெளியாகும் வரை மாதத்திற்கே 100 பேர்தான் உடல் உறுப்பு தானம் செய்து வந்துள்ளனர். அரசு மரியாதை என்றதும் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு முன் வந்துள்ளனர் என்கிறது சமீபத்தில் வெளியான ஓர் அறிக்கை.
இந்தியாவிலேயே முதல்முறை!
பெரும்பாலும் இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக்கூட தானம் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்க, மதரீதியான நம்பிக்கைகளே பிரதான காரணமாக இருந்துள்ளது. அந்த நம்பிக்கையில் ஓர் அறிவியல் பார்வையை மக்கள் இப்போது செலுத்த ஆரம்பித்துவிட்டனர் என்கிறார் டாக்டர் அமலோற்பவநாதன்.

இந்தத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்ற மருத்துவர் அவர். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை இவர் எப்படி எடுத்துக் கொண்டுள்ளார்? அவரிடம் பேசினோம்.
அவர், "இந்தியாவிலேயே இந்த உறுப்பு மாற்றுத் திட்டம் என்பது தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமை நம் மாநிலத்தையே சேரும். 2008 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு கருணாநிதியால்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் உறுப்பு தானம் என்பது பற்றிப் பரவலாக விழிப்புணர்வே இல்லை. அப்படியான ஒரு காலகட்டத்தில் இதை யோசித்துச் செயல்படுத்தியவர் மு.கருணாநிதி.

அன்றைக்கு நான்தான் அந்தத் திட்டத்தினை ஆரம்பித்தேன். முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். அப்போது 12 மணிநேரம் அந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
ஆனால், இப்போது ஆறு மணிநேரத்தில் அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துவிடக் கூடிய அளவுக்கு நவீன உபகரணங்கள் வந்துவிட்டன. ஆனால், அன்றைக்கு அது பெரிய சவால்.
இந்தத் திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை உறுப்பு தானத் திட்டத்தில் முதல் இடத்தை தமிழ்நாடுதான் வகித்துள்ளது.

கடந்த கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகள் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. ஒரு வருடத்தில் 5 அல்லது ஆறு பேர்தான் செய்துள்ளனர். கொரோனா அலை முடிவடைந்தபின் உறுப்பு தானம் அதிகரித்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகளில் படித்தேன்.
உலக அளவில் தமிழ்நாடு முன்னோடி!
ஆகவே முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை ஒரு மருத்துவராக நான் மனதார வரவேற்கிறேன். கட்டாயம் இது ஒரு முன்மாதிரியான அறிவிப்பு மட்டுமல்ல; முற்போக்கான மற்றும் புரட்சிகரமான அறிவிப்பும்கூட. இந்தியாவில் பிற மாநிலங்களில் இப்படி யாரும் அறிவிக்கவில்லை.
இன்னும் அழுத்திச் சொன்னால், உலக அளவில்கூட வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்கூட இப்படி ஒரு திட்டம் நான் அறிந்தவரை அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவும் இல்லை. அதில் தமிழ்நாடு முதல்வர்தான் முன்னோடியாகத் திகழ்கிறார்.

அரசின் உயர்ந்த மரியாதை எது? இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை செலுத்துவதுதானே? இந்த மரியாதை சமூகத்தில் உயர்ந்த இடத்திலிருந்தவர்களுக்கு இதுவரைக் கொடுக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் சேவையை மதித்து அரசு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அப்புறம் அமைச்சர், முதல்வர், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய பதவிகளை அலங்கரித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மளமளவென்று உயர்ந்த எண்ணிக்கை:
ஆனால், ஒன்றுமே இல்லாத ஒரு சாதாரண குடிமகன், தனது உடல் உறுப்பை தானம் செய்யும்போது அவர்களுக்கு இணையான மரியாதை வழங்கப்படுகிறது என்றால் சும்மாவா? இது எவ்வளவு பெரிய மரியாதை. அதை ஸ்டாலின் உருவாக்கிக் கொடுத்துள்ளார். ஆகவே அனைவரும் இதை ஒரு மனதாக வரவேற்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வெளியான பிறகு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நான் பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன்.
முன்பு மாதத்திற்கு சுமார் 200 பேர் தானம் செய்ய முன்வருவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்குத் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைதான் காரணம். இந்தளவுக்கு மக்கள் முன்வர முதல்வரே இதை அறிவித்ததுதான் காரணம். ஒருவர் தன் இறப்புக்குப் பிறகு உறுப்பை தானம் செய்வதால் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்" என்கிறார்.

தமிழக வரலாற்றில் வடிவேலு:
முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கடந்த மாதம் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
விபத்து ஒன்றி சிக்கி வடிவேலு, மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஆகவே அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.
எப்படி 2008 ஆம் ஆண்டு விபத்தில் நிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற 18 வயது இளைஞர் உறுப்பு தான வரலாற்றில் இடம்பிடித்தாரோ, அதைப்போன்று வடிவேலுவும் அரசு மரியாதைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். ஆகவே அவரது உடல் உறுப்புக்கள் அவரது உறவினர்களால் தானம் கொடுக்கப்பட்டன.
கடந்த 2 வாரங்கள் முன்னதாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சமநாதபேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண குமார், இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார்.
அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். ஆகவே, அவரது உறவினர்கள் கிருஷ்ண குமாரின் உடல் உறுப்புகளை தானம் அளித்தனர். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புப்படி அவருக்கு அரசு இறுதி மரியாதை செய்யப்பட்டது.

யார் யார் உறுப்பு தானம் செய்யலாம்?
யார் எல்லாம் உறுப்பு தானம் செய்யலாம்? அது குறித்து விளக்கம் அளிக்கிறார் அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் துறை ஆலோசகர் டாக்டர் வைரக்கனி. "உறுப்பு தானம் செய்பவர்கள் இரண்டு வகைப்படுவர். ஒறு, வாழும்போதே உடல் உறுப்பை தானம் செய்பவர்கள். இரண்டு, இறந்த பிறகு அவரது உறவினர்கள் மூலம் உறுப்புகளை தானம் செய்பவர்கள்.
வாழும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகிறவர்கள் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். முன்பு எல்லாம் சர்க்கரை வியாதி இருந்தால் உடலை தானம் செய்ய முடியாது. ரத்தக்கொதிப்பு இருந்தால் உடலை தானம் செய்ய முடியாது.

ஆனால், இன்றைக்கு அறிவியலால் மருத்துவ உலகம் வெகுவாக முன்னேறிவிட்டது. அதனால் யார் வேண்டுமானாலும் தானம் செய்ய முடிகிறது. பழைய தடைகள் எல்லாம் உடைந்துபோய் விட்டன.
இறந்தவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் இருந்தாலும் உடல் உறுப்பை தானம் செய்ய முடியும். அதற்கு எந்தத் தடைகளும் இல்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications