"அது இல்லாட்டி இது".. முதல்வரின் லிஸ்ட்டில் அமைச்சர்கள்.. அந்த 22 பேர்.. பெரும் "தலைகள்" வெயிட்டிங்
திமுகவில் அமைச்சர்கள் சிலரின் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு முக்கியமான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.. அதுவும் தன்னுடைய அமைச்சர்கள் விஷயத்தில் இருந்தே அதை செயல்படுத்த போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்..!
ஒருவருக்கு ஒரு பதவி என்று கட்சி கட்டுப்பாடு உள்ளது.. இதை திமுக இன்னும் செயல்படுத்த தொடங்கவில்லை..
பலவித மாறுதல்களை செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில்தான் தற்போதைய கவனத்தை செலுத்தி உள்ளாராம். திமுகவில் 77 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அதில், பெரும்பாலான மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களாகவும் உள்ளனர்...
மாவட்ட செயலாளர்கள்
இப்போதைக்கு 22 பேர் அதாவது பி.கே.சேகர்பாபு, மா.சுப்ரமணியன், ஆவடி நாசர், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சிவசங்கர், செந்தில்பாலாஜி, ரகுபதி, சாமிநாதன், முத்துசாமி, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ் போன்றோர் அமைச்சர்களாகவும், மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார்கள்.
வருமானம்
இந்நிலையில், கடந்த வாரம் இதை பற்றி ஒரு செய்தி கசிந்தது.. அதன்படி, சில அமைச்சர்கள், தங்கள் துறையில் வருமானம் வரும் பணிகளுக்கு மாமனார், மைத்துனர், மருமகன், மகன் என்று உறவினர்களை அதிகார மயமாக்கி உள்ளனர் என்றும் இதில் மாவட்டச் செயலராக இருக்கும் அமைச்சர்கள், நெருங்கிய உறவினர்களை தங்களின் பினாமியாக வைத்து கொண்டு, சொத்துக்களை வாங்குகின்றனர் என்ற புகார்கள் அறிவாலயத்தில் குவிந்து வருகிறது என்றும் பரபரத்தன.
இரட்டை பதவி
மேலும், இப்படி இரட்டை பதவியில் இவர்கள் இருப்பதால் கட்சி வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.. அதனால், இந்த 22 மாவட்ட செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட உள்ளதாகவும் காரணம் கூறப்பட்டது.. ஆனால், 22 பேரையுமே ஸ்டாலின் நீக்கும் முடிவில் இல்லை என்கிறார்கள்.. அதனால், ஒன்று மாவட்ட செயலாளர் பதவி, அல்லது அமைச்சர் பதவி என்று ஏதாவது ஒன்றை மட்டுமே அவர்களுக்கு ஸ்டாலின் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
திமுக
அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை விடுவித்தால், அதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்படுமாம்.. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால், திமுகவை நம்பி வந்த மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு அந்த வாய்ப்பு தரப்படுமாம்... ஆனால், அவர்கள் யார் என்பதையெல்லாம் முதல்வரே முடிவு செய்து வருகிறாராம்.. அந்த வகையில் ஒருசிலருக்கு அமைச்சர் பதவியும் பறிபோக வாய்ப்புள்ளது.. அவர்கள் யாரென்று தெரியவில்லை.. ஆனால், திமுக புதுபொலிவுடன் திகழ்வதற்கான நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன..!