சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை..!
சென்னை: கொரோனாவை உறுதி செய்வதற்கான சோதனைகளில், முக்கிய பங்கு வகிக்கும் சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ரூ.3,500-க்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனுக்கு இப்போது ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதனால் நோயை கண்டறிவதற்கே ஏழை எளிய மக்கள் பல ஆயிரங்களை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்.டி.பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.1,200 தான் கட்டணம் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது போல் சி.டி.ஸ்கேன்களுக்கும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோவிட் நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதற்காக நுரையீரல் சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை செய்யப்படுகிறது.
கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில்.. மேலும் 6-8 வாரம் லாக்டவுன் நீடிக்க வேண்டும்.. ஐசிஎம்ஆர் அறிவுரை!
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்கேன் நிலையங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே கொரோனாவை கண்டறிய ஆர்.டி.பிசிஆர் சோதனையே சிறந்த வழிமுறை என்றும் சிடி ஸ்கேன் மூலம் நோயின் தீவிரம் எந்தளவு இருக்கிறது என்பதை வேண்டுமானால் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சி.டி.ஸ்கேன் கட்டணம் விவகாரத்தில் அரசு தலையிட்டு ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்காத வகையில் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.