ஆஹா.. ஒரேநாள் நடந்த பரபரப்புகள்.. கரெக்ட்டான 'டைட்டில்' வெச்ச செல்வப்பெருந்தகை.. அடடே
சென்னை: தமிழக சட்டசபையில் இதுவரை எந்தவொரு ஆளுநரும் அவையின் மாண்பை மீறியதே இல்லை. ஆனால் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்றைய தினம் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை ஆளுநர் அப்படியே படிக்காமல் முக்கியமானதை விட்டுவிட்டு தேவையில்லாத வரிகளை சேர்த்ததாக சொல்லப்படுகிறது.
அரசு தயாரித்த உரையை காட்டி ஒப்புதல் வாங்கிவிட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால் ஆளுநர் சொன்ன திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் உரை
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸின் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசு தொகுத்தளித்த உரையை வாசிக்காமலும், சில முக்கியமான பத்திகளை விடுத்தும், சில அவசியமில்லாத பத்திகளை புகுத்தியும் வாசித்தார். அவை முடிந்து பின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது மரபு. அதற்கு பின்பு தான் ஆளுநர் அவையை விட்டு வெளியேறுவார்.

தமிழக முதல்வர்
ஆனால், மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புகளையும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியும் மற்றும் தேசிய கீதம் வாசிப்பதையும் தவிர்த்து வேண்டுமென்றே அவமரியாதை செய்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பை மிகவும் மதிக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எந்தவொரு ஆளுநரும் அவையின் மாண்பை இவர் போன்று மீறியதில்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
தமிழ்நாடு அரசு ஆளுநர் உரைக்கென்று தயாரித்து கொடுத்த அறிக்கையில் அவர் குறிப்பாக சில பத்திகளை விட்டு விட்டு படித்தது 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்னும் திரைப்படத்தின் பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆளுநருக்கென்றே திரைப்பட இயக்குநர் இந்த பெயரை முன்கூட்டியே வைத்திருக்கிறாரோ என்று எனக்கு தோன்றியது.

தனிநபர் தீர்மானம்
எனவே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து அவையில் விவாதம் செய்து, ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீர்மானத்தை முன்மொழிய உள்ளேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications