உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் உருவ பொம்மை எரிப்பு.. தமிழகத்தில் 2-வது நாளாக காங். போராட்டம்!
சென்னை: உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை கண்டித்து தமிழகத்தில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறச் சென்றார் ராகுல்காந்தி. அப்போது அவரை அனுமதிக்க மறுத்த போலீஸ் ராகுலை தடுத்து நிறுத்தி கீழே தள்ளியது. இதனை கண்டித்து நேற்று மாலை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் குதித்தனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 2-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத் தலைமையில் சென்னை முகப்பேரில் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் உருவப்பொம்மையை எரித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
நேற்று ராகுல் காந்தி... இன்று ஹத்ராஸில் கீழே தள்ளி விடப்பட்ட... திரிணமூல் காங்கிரஸ் எம்பி பிரெய்ன்!!
மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையில் தட்டில் ஒலி எழுப்பி பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை விமர்சித்தனர். இதனிடையே திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளான தமிழ்ச்செல்வனும், திலகரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதனால் முகப்பேர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அங்கிருந்து அகற்றியது. இதேபோல் புதுச்சேரி, கோவை, நெல்லை என பல இடங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் உ.பி. மாநில அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தினர்.