‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கூலித் தொழிலாளியின் மகள்.. செங்கல்பட்டு ரக்ஷயா சாதித்தது எப்படி?
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளியின் மகள் ரக்ஷயா என்பவர், 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
குடும்பமே வறுமையில் வாடிய சூழலிலும், பெற்றோர் கூலித் தொழிலாளர்களாக இருந்து வரும் நிலையிலும், பகுதி நேரமாக வேலை செய்து அழகி போட்டிக்காக தன்னை தயார் படுத்தி வந்த ரக்ஷயா தனது கனவை எட்டிள்ளார்.
மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று அசத்தியுள்ள கட்டிட கூலித் தொழிலாளியின் மகள் ரக்ஷயாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அடுத்ததாக டிசம்பரில் நடைபெற இருக்கும் அழகிப்போட்டியில் பங்கேற்று 'மிஸ் இந்தியா' பட்டம் பெறுவேன் என நம்பிக்கையோடு சொல்கிறார் ரக்ஷயா.

கூலித் தொழிலாளி மகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். கட்டிட கூலித் தொழிலாளியான மனோகரின் மகள் மகள் ரக்ஷயா(20), கல்லூரி படிப்பைக் கடந்த ஆண்டு முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். குடும்ப வறுமை ஒரு பக்கம் துரத்தினாலும், தனது கனவை நோக்கி நடைபோட்ட ரக்ஷயா, பகுதி நேர வேலைக்குச் சென்று தன்னை அதற்காக தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.

ரக்ஷயா
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அவர் மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 'Forever star India' என்ற அமைப்பு நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார்.

மிஸ் தமிழ்நாடு
இந்நிலையில், ஜெய்ப்பூரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இதில் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் பங்கேற்றனர். 750 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகினர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ரக்ஷயா 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

மிஸ் இந்தியா பட்டம் வெல்வேன்
வரும் டிசம்பரில் நடைபெறும் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகியுள்ள 750 பேரும் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் தேர்வாகும் நபர் 'மிஸ் இந்தியா' பட்டத்தைப் பெறுவார். அந்தப் போட்டியில் பங்கேற்று நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தைப் பெறுவேன் என ரக்ஷயா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ரக்ஷயாவின் பெற்றோர்
தங்கள் மகள் 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்றது குறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், சிறு வயது முதலே ரக்ஷயா, விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். நாங்கள் அதை ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, பகுதி நேரமாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து வறுமையில் வாடிய சூழலில், சிலர் ரக்சயாவின் படிப்பிற்கு உதவினர். தற்போது அவர் தன் விடாமுயற்சியால் மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்றுள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications