5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார் ஸ்டாலின் - ட்வீட்டில் போட்டு தாக்கும் குஷ்பு
ஸ்டாலின் கனவு காணும் அனைத்தையும் பாஜக கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியுள்ளது. அவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். காப்பி பேஸ்ட் செய்வது பழைய முறை. கட் செய்து காப்பி செய்வது தான் இப்போதிருக்கும் புதிய முறை. ஸ்டாலின் புதிய முறையைத் தான் பயன்படுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்டாலின் கனவு காண்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சட்டசபைத் தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொகுதிப்பங்கீடு பேசி முடிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது கூட இதனால் ஒத்திப்போடப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி தினத்தன்று வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிட உள்ளது திமுக. முன்னதாக தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்று கூறி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

7 உறுதி மொழிகள்
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்! பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும்.
7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்! என்று கூறி அந்த உறுதிமொழியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மு.க ஸ்டாலின்.

குஷ்பு கிண்டல்
அந்த ட்வீட்டை கிண்டல் செய்துள்ள குஷ்பு, காப்பி பேஸ்ட் செய்வதெல்லாம் பழைய கதை. கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை. திமுக தலைவர் ஸ்டாலின் புதிய முறையைத் தான் பின்பற்றுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
|
ஸ்டாலின் கனவு
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் ஏற்கெனவே நம் பிரதமர் நரேந்திர மோடியால் நிறைவேற்றப்பட்டு விட்டன. ஸ்டாலின் கனவு காணும் அனைத்தையும் பாஜக கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியுள்ளது. அவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார் என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குஷ்புவின் ட்வீட்டிற்கு பதில்
திமுகவில் குஷ்பு இருந்த போது புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கருத்து கூறியதால் ஸ்டாலின் ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். குஷ்புவின் வீடு மீது கல்வீசி தாக்கினர். இதனால் திமுகவை விட்டு வெளியேறினார் குஷ்பு. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கேயும் அவரை ஒரு ட்வீட்தான் கட்சியை விட்டு வெளியேற்றியது. இப்போது ஸ்டாலினுக்கு எதிராக பதிவிட்டுள்ள ட்வீட் எத்தகைய எதிர்வினையை தரப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications