சென்னையில் அதிகரிக்கும் கொரோனா... முககவசம், தனிமனித இடைவெளி அவசியம் - மா.சுப்ரமணியன்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிற நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு கண் மருத்துவமனையில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான "மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவை வாகனங்கள் மற்றும் கண் மருத்துவ உபகரணங்களை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவைக்காக 90 லட்சம் ரூபாய் செலவில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து கிராமபுறங்களிலும் சென்று மக்களுக்கு கண் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படும்.
புத்தாண்டு தினத்தில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? - சேகர்பாபு சொன்னது இதுதான்
வீடுகளுக்குச் சென்று கண் சிகிச்சை
மக்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 42 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட 1.19 சதவீத முதியோர்களுக்கு இந்தியாவில் பார்வை குறைபாடு இருக்கிறது. தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.18 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. ஆனாலும், கிராமபுறங்களில் கண்புரை பாதிப்பு, சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, நீர் அழுத்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இதேபோன்று மேலும் பல வாகனங்கள் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதாக கூறிய அமைச்சர், சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிவதில் மற்றவர்களுக்கு சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வழிகாட்டியாக இருங்கள்
வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்களில் 58 சதவிகிதம் பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் 100 சதவிகிதம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அந்தவகையில் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே, சென்னையில் மக்கள் முக கவசம் அணிந்து, மற்ற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பயமோ பதற்றமோ தேவையில்லை
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயமோ பதற்றமோ அடையத் தேவையில்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பொதுமக்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது என்று கூறிய அமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக கூறினார். 17வது மெகா தடுப்பூசி முகாம் புத்தாண்டு காரணமாக சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.