ஜூன் மாதத்தில் கொரோனா உச்சத்திற்கு வரும் - உயிரிழப்பை குறைக்க வேண்டும் - மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50,000த்திற்கும் மேலானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறைவாக இருந்தாலும், தொற்று தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையே காணப்பட
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் எனக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தொற்று, மேலும் வேகமாகப் பரவாமல் இருக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்களுடன் காலையில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடிய இக்கட்டான சூழலில் இந்த அரசு பொறுப்பேற்று இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்களின் உயிர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சென்ற கூட்டத்தில் இந்தத் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கின் அவசியம் குறித்து நீங்கள் அனைவரும் வலியுறுத்தினீர்கள். அனைவரின் கருத்துகளின் அடிப்படையில் 14-05-2021 முதல் குறிப்பிட்ட சில தளர்வுகளை மட்டும் அனுமதித்து ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு மட்டுமல்லாது, நாள்தோறும் 1.6 இலட்சம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், கூடுதல் மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளைக் கடந்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தியுள்ளோம்.
மேற்கூறிய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் வேகம் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது நாள்தோறும் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50,000த்திற்கும் மேலானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையோடு ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், தொற்று தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையே காணப்படுகிறது.
இச்சூழலில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் எனக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தொற்று, மேலும் வேகமாகப் பரவாமல் இருக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.