கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா அறிகுறி இருப்பவர்கள், குப்புறப்படுத்து ஓய்வெடுத்தால் போதுமானது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பாரசிட்டமால் 500மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அறிகுறி தென்படுமாயின், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.
கொரோனா வந்தால் என்னவெல்லாம் பாதிப்புகள் வரும்.. நோயாளியாக இருந்த அனுபவம்!
முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோய் இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தனிமை தேவை
கொரோனா அறிகுறி இருப்பவர்கள், குப்புறப்படுத்து ஓய்வெடுத்தால் போதுமானது. நோய் அறிகுறி உள்ளவர்கள் 2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை ஓய்வெடுக்கலாம். கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் பரிந்துரை
மருத்துவர் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம். பாரசிட்டமால் 500மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும்.
மருத்துவமனை
இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும். தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும்.
மருத்துவ உதவி
கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.