தமிழகத்தில் இன்றே கடைசி - கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு - அமைச்சர் மா சுப்பிரமணியன்!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல், புதன் கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று 38-வது தடுப்பூசி முகாம்கள், மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள், இன்றோடு நிறைவடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவதாவது: தமிழகத்தில் இதுவரை 96.55% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91.39% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழத்தில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவடைகிறது. அக்டோபர் மாதம் முதல், ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான தடுப்பூசிகள் போடப்படும்.
100 ஆண்டுகளாக போராட்டம்! அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ
பூஸ்டர் தடுப்பூசி
இதேபோல், இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி, வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது தெரியவில்லை. அடுத்த 3 தினங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்களிடையே சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20.04% பேர், அதாவது, 86,31,976 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
மக்களைத்தேடி மருத்துவம்
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் துவங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 90 லட்சமாவது பயணாளிக்கு இன்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 74% பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 40% பேருந்து இந்த திட்டத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 35 லட்சம் பேரும், நீரழிவு நோய்க்கு 24 லட்சம் பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் என இரு நோய்களும் பாதிக்கப்பட்ட 18 லட்சம் பேரும், பேலியேட்டிவ்கேர் என்ற நோய் ஆதரவு நோயாளிகள் 3 லட்சம் பேர், பிசியோதெரபி நோயாளிகள் 7.85 பேரும், டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள 1000 பேரும் பயனடைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சல் பாதிப்பு
தமிழகத்தில் 465 பேர் இன்ப்ளுயென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 269 பேரும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு 186 பேரும் சிகிச்சையில் உள்ளன. 5 முதல் 14 வயதுடையோர் 62 பேருக்கும், 15 முதல் 60 வயதுடையோர் 223 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 99 பேருக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1000 காய்ச்சல் சிறப்பு முகாம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 1000 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில், 389 நடமாடும் மருத்துவ வாகனமும் ஈடுபடுத்தப்பட்டது. மேலும், தொடர்ந்து 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறிந்த பகுதிகளில், தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4193 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடத்தப்பட்ட முகாமில், 10,89,529 பேர் பயனடைந்துள்ளனர். இதேபோல், 352 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மக்கள் 100% பேர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
104 என்ற எண்ணில் புகார்
அரசு மருத்துவர்கள் சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெறுகிறது. அதன் போட்டியாக தற்போது போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவ சங்கத் தேர்தலுக்குப் பிறகு போராட்டங்கள் இருக்காது. மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதாக வெளியாகும் தகவல் தவறானது. போதிய படுக்கைகள் காலியாகத்தான் உள்ளது. இதுகுறித்து புகார் இருந்தால் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.