கண்டெயின்மெண்ட் சோன் பகுதியில்.. தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள்.. மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா கேஸ்கள் அதிகமாக இருக்கும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனா கேஸ்கள் அதிகமாக இருக்கும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மூன்று மண்டலம்
அதன்படி சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்கள் எப்படி பிரிக்கப்படும்
இந்த மண்டலங்கள் எப்படி பிரிக்கப்படும் என்றும் அரசு விளக்கி உள்ளது . அதன்படி இதுவரை கேஸ்கள் இல்லாத, அல்லது கடந்த 21 நாட்களாக கேஸ்கள் இல்லாத பகுதிகள் கிரீன் சோன்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16க்கும் மேல் கொரோனா கேஸ்கள் இருந்தால் அது ரெட் சோன் பகுதிகள் ஆகும். இதற்கும் குறைவான கேஸ்கள் இருந்தால் அந்த பகுதி ஆரஞ்ச் சோன் என்று அழைக்கப்படும்.
காலை வெளியான பட்டியல்
இதற்கான பட்டியலை இன்று காலை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதிக மக்கள் தொகை இருக்கும் ஒரே பகுதிகள் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்படும். அதாவது ஒரு மாவட்டத்தில் இருக்கும் மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் வந்து மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் பகுதியில் கடந்த 21 நாட்களாக கேஸ்கள் இல்லை என்றால், அந்த வெளியே இருக்கும் பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மாறாக மாநகராட்சியில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். இதன் மூலம் பல இடங்களில், கிராமங்களில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இரண்டு மண்டலங்களாக இப்படி சில பகுதியை பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கண்டெயின்மெண்ட் சோன்
அதேபோல் அதிக கேஸ்கள் இருக்கும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படும். அங்கு தீவிரமான காண்டாக்ட் டிரேசிங் சோதனைகள், வீடு வீடாக செய்யப்படும் சோதனைகள் அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் இருக்கும் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியே வரவோ அல்லது அந்த பகுதிக்குள் செல்லவோ முடியாது. மருத்துவ தேவைக்கு மட்டுமே இவர்கள் வெளியே வர முடியும். இந்த கண்டெயின்மெண்ட் பகுதிக்குள் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
தொடரும் பொது கட்டுப்பாடு
இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எப்போதும் போல விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மாநிங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இயங்காது. பள்ளி கல்லூரிகள் இயங்காது. தங்கும் ஹோட்டல்கள் செயல்படாது. உணவகங்களின் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. அதேபோல் மால்கள், சினிமா தியேட்டர்கள் இயங்காது. வழிபாட்டு தளங்கள் செயல்படாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
என்ன கட்டுப்பாடு
அதேபோல் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு மேலும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும். அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.