நாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்
சென்னை: உருமாறி பரவும் கொரோனாவுக்கு புதிதாக சில அறிகுறிகள் காணப்படுகிறது. முதல் அறிகுறி உலர்ந்த வாய், இந்த அறிகுறி கொரோனா தொற்று ஏற்பட்டதும் ஏற்படுவதாகும். பின்னர் தொண்டை வலி, காய்ச்சல் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இரண்டாவது அறிகுறி உலர்ந்த நாக்கு. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
முதல் அலை தொற்றின்போது பெரியவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள், இளைஞர்களுக்கு தொற்று இருந்தாலும் பெரிய சிக்கல் ஏற்படவில்லை. தற்போது, குழந்தைகளைக் கூட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வைரஸ் கிருமி தீவிரமாக உள்ளது. அனைத்து வயதினரையும் கொரோனா பாதித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் 2,75,306 பேர் பாதிப்பு - 1,625 பேர் மரணம்

புதிய கட்டுப்பாடுகள்
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனா இரண்டாவது அலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள்
கடந்த ஆண்டுகளில் கொரோனா நோய் தாக்கியதன் அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சுத்திணறல் ஆகியவைதான் இருந்தன. உருமாறி பரவும் கொரோனாவுக்கு புதிதாக 2 அறிகுறிகள் காணப்படுகிறது. இந்த புதிய அறிகுறிகள் கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய அறிகுறிகள்
இப்போது 2வது அலையில் கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள் தென்படுகின்றன. சிலருக்கு கண்வலி அல்லது கண்ணின் நிறம் பிங்க் ஆக மாறுவது போன்ற அறிகுறிகளையும் பார்க்க முடிவதாக ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

கண்வலி, தலைவலி
கண்கள் வறண்டு காணப்படும். தொடர்ச்சியான இருமல், அடிவயிற்றை எப்போதும் புரட்டுவது போன்று இருக்கும். புதிதாக தலைவலியும் பலருக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் காணப்பட்ட அறிகுறிகளின் தொடர்ச்சியாக இந்த புதிய அறிகுறிகளும் இணைந்துள்ளது. எனவே கண்வலி, தலை வலி என்றாலும் அலட்சியமாக இருக்ககூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாக்கில் புள்ளிகள்
வாய் உலர்ந்து போதல் அறிகுறி கொரோனா தொற்று ஏற்பட்டதும் ஏற்படுவதாகும். பின்னர் தொண்டை வலி, காய்ச்சல் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இரண்டாவது அறிகுறி உலர்ந்த நாக்கு. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் நாக்கை உலர வைக்கும். தொடர்ந்து நாக்கின் மீது வெள்ளை புள்ளிகள் தோன்றும்.

சாப்பிடுவதில் சிக்கல்
இதனால் உணவு உண்பதில் சிரமம் ஏற்படும். உமிழ்நீர் குறைபாடு காரணமாக உணவை முறையாக மென்று சாப்பிடவும் முடியாது. அதுமட்டுமின்றி பேசுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அதேநேரம் இவைகளை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகளும், தரவுகளும் தேவை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கவனம் தேவை
இந்த அறிகுறிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பையைச் சேர்ந்த மருத்துவர் கவுரி அகர்வால்,வயதானவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவிலான இளம் வயதினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இவர்களில் பலருக்கும் காய்ச்சல் எதுவும் வரவில்லை ஆனால், வாய் உலர்தல், வயிறு செரிமான பிரச்னை, வாந்தி, வயிற்றுப்போக்கு, கண்கள் சிவத்தல், தலைவலி போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மாஸ்க் அணிவது அவசியம்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொது சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவுவது, வெளியே மாஸ்க் அணிந்து செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications






























