நீங்கள் நினைத்து பார்க்காத வேகத்தில்.. தீயாக பரவுகிறது கொரோனா.. மக்களே உஷார்!
சென்னை: அரசு வெளிப்படையாக அறிவித்ததோ, இல்லையோ, ஆனால் யதார்த்தத்தில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Recommended Video

கொரோனா வைரஸ் தன்னைத்தானே உரு மாற்றம் செய்துகொண்டு பரவ ஆரம்பித்திருப்பதுதான் திடீரென உலகம் முழுக்க அது வேகமாக பரவுவதற்கு காரணம் என்கிறார்கள்.
அதிலும் சில உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ்களை பிசிஆர் பரிசோதனையில் கூட கண்டுபிடிக்க முடியாது என்பது ஆபத்தானது.

பரிசோதனை குறைவு
தமிழகம் உட்பட நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதை அரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் உறுதிப்படுகின்றன. ஆனால் சமீபகாலமாக நோய்த்தொற்று குறைந்ததால் பரிசோதனை அளவு குறைந்தது. அந்த பரிசோதனையின் அளவை வைத்து இவ்வளவு நோய் பரவுகிறது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால் பரிசோதனை அளவை அதிகரித்தால் எவ்வளவு தூரம் இதன் பரவல் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

10 நாட்களாக என்னாச்சு
புள்ளி விவரங்களைக் கூட விட்டு விடுங்கள். நீங்களே சற்று கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். கடந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியது. உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது பொதுவெளியில் பிரபலமானவர்கள் எத்தனை பேர் தொடர்ந்து நோயின் பாதிப்பால் முடங்கிப் போயினர் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்போதும் அதே நிலவரம்தானே. அதுவும் கடந்த 10 நாட்களாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், பொதுவெளியில் பிரபலமானவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருவதை யோசித்து பார்த்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

வேட்பாளர்கள் நிலைமை
தேசிய அளவில் பல அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இரண்டு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரச்சாரத்துக்கு வர முடியாமல் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அதில் ஒருவர் அப்துல் கலாம் ஆலோசகராக இருந்த பொன்ராஜ். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் அவர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக தொடர்ந்து பழகி வந்தவர்.

ஓராண்டுக்கு பிறகு
இந்த நிலையில்தான்,சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற செய்திகள் எல்லாம் ஓராண்டுக்குப் பிறகு கேட்கக்கூடிய தகவலாக இருக்கிறது.

தடுப்பூசியில் மெத்தனம்
தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ள நிலையில், நோய் பரவலுக்கு அதுவும் ஒரு காரணமாக மாறிவிட்டது. முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களில் கணிசமானவர்கள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மெத்தனம் அல்லது தடுப்பூசி பற்றிய அறியாமை உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் காரணமாக கொரோனா பரவல் இருப்பதாக கூறினால் அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது. உலகம் முழுக்கவே இப்போது இரண்டாவது அலை வீசிக் கொண்டிருப்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மக்களுக்கு தேவை விழிப்புணர்வு
எனவே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க முடியாது என்பதை உணர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து பிரச்சாரத்தை கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். சும்மா கூட வெளியே சொல்லக்கூடாது, எப்போதும் கையில் சானிடைசர் வைத்துக்கொள்ளவேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும், இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவது ரொம்பவே அவசியம்.

எப்படி பரவியது என தெரியாது
ஏனென்றால் யாருக்கு எப்படி கொரோனா பரவியது என்று தெரியாத வேகத்தில் பரவல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்ட யாராவது உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் கேட்டுப்பாருங்கள். எங்கே இருந்து அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது புரியாமல் விழிக்க கூடும். அந்த அளவுக்கு கொரோனா தீ போல பரவி கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே, இப்போதே விழித்திருங்கள் அல்லது ஊரடங்கு போட்டு பொருளாதாரம் முடங்குவதற்கு அது காரணமாக மாறிவிடும். ஊரடங்கு இல்லாமல் நமது சொந்த முயற்சியின் மூலமாக, சமூக இடைவெளியை கடைபிடித்து, பொருளாதாரத்தை காப்பதோடு நமது உடல் நலத்தையும் காத்துக் கொள்ள வேண்டும், என்பதுதான் விஞ்ஞானிகள் கோரிக்கை.












Click it and Unblock the Notifications