அவரின் வீடியோ வதந்தி.. ரஜினிகாந்திற்கு எதிராக ரிப்போர்ட் அடித்தது யார்? டிவிட்டரில் என்ன நடந்தது?
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்ட வீடியோ நேற்று நீக்கப்பட்டது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 341ஐ தாண்டி உள்ளது. தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக புதிய புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று ஒருநாள் மட்டும் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் இன்று ஒருநாள் மட்டும் மக்கள் வீட்டிற்குள் இருப்பார்கள்.
ரஜினிகாந்த்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்தும், ஜனதா ஊரடங்கு குறித்தும் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது, இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காகத்தான் ஜனதா ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 12 மணி நேரம் மட்டும் உயிர்வாழ கூடியது. அதற்கு மேல் அந்த வைரஸால் உயிர் வாழ முடியாது. 12 முதல் 14 மணிநேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே இந்தியா ஆபத்தில் இருந்து தப்பிவிடும்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதில் இந்தியா 2-ம் நிலையில் உள்ளது. இத்தாலி போன்ற நாடுகள் இதில் மூன்றாம் நிலையில் உள்ளது. அங்கு தொடக்கத்தில் இதுபோல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கவில்லை. இதனால்தான் இத்தாலி மோசமாக பாதித்தது. இந்தியா அதேபோல் 3-ம் நிலைக்குப் போய்விடக் கூடாது. இதனால் மக்கள் பிரதமர் மோடி அறிவித்தது போல மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
என்ன தவறு
நடிகர் ரஜினிகாந்த் இந்த வீடியோவில் பேசிய தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் செத்துவிடும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். இது முழுக்க முழுக்க தவறானது. ஏனென்றால் கொரோனா வைரஸ் ஸ்டீல் கம்பிகளில் (பேருந்து, ரயில், மெட்ரோ கம்பிகள் ஸ்டீல்களால் ஆனது) 3 நாட்கள் வரை வாழும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களில் 4 நாட்கள் வரை வாழும். குளிரான இடங்களில், சேர்களில் 2 நாள்கள் வரை வாழும். வெப்பம் குறைந்த இடங்களில் இதன் வாழ்நாள் இதைவிட அதிகமாக இருக்கும்.
மாற்றி சொன்னார்
ஆனால் ரஜினிகாந்த் இதை தவறாக வாட்ஸ் ஆப் பார்வேர்ட் மெசேஜ் ஒன்றை பார்த்துவிட்டு பேசி இருக்கிறார். இதனால் அவரின் வீடியோ டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. அவர் டிவிட்டரில் இந்த வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்கள் கழித்து அது நீக்கப்பட்டது. அதன்பின் அந்த வீடியோவின் யூ டியூப் லிங்கை அவர் ஷேர் செய்து இருந்தார். அதையும் டிவிட்டர் நிறுவனம் உடனே நீக்கியது.
யார்
இந்த நிலையில் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்திற்கு எதிராக சிலர் இந்த வேலையை செய்து இருக்கலாம் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் டிவிட்டரில் கூறி வந்தனர். பாஜகவை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ந்து புலம்பி வந்தனர். ஆனால் இந்த வீடியோ எப்படி நீக்கப்பட்டது என்பது தொடர்பாக விவரம் வெளியாகி இருக்கிறது.
டிவிட்டர் கொரோனா
சிஏஏ போராட்டம், மத கலவரம், கொரோனா போன்ற கொல்லை நோய் குறித்த பொய்யான செய்திகளை தடுப்பதற்காக டிவிட்டர் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக டிவிட்டர் நிறுவனம் மூன்று திட்டங்களை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது.
டிவிட்டர் வைத்து இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக பொய்யான செய்திகளை கண்டுபிடிப்பது.
டிவிட்டர் நிறுவனத்தில் இருக்கும் உண்மை கண்டறியும் குழுக்கள் மூலம் பொய்யான செய்திகளை களைவது.
அதேபோல் டிவிட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருக்கும் சில தனியார் உண்மை கண்டறியும் குழுக்கள் மூலம் பொய்யான செய்திகளை கண்டுபிடிப்பது.
இயங்குவது எப்படி
இந்த உண்மை கண்டறியம் குழுக்களில் இருக்கும் நபர்கள் வேகமாக பரவும் பொய்யாக வதந்திகளை கண்டுபிடிப்பார்கள். அந்த டிவிட்களை, டிவிட்டர் நிறுவனத்திடம் சமர்பிப்பார்கள். பின் அதை டிவிட்டர் நிறுவனம் நீக்கும். அதேபோல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொரோனா தொடர்பான போஸ்ட்கள், வீடியோக்கள் எல்லாம் கண்டறியப்படும். அதில் தவறாக தென்படும் வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பம் டிவிட்டர் பணியாளர்களிடம் சமர்ப்பிக்கும்.
சோதனை நீக்கம்
இதை டிவிட்டர் நிறுவனம் கடைசியாக்பரிசோதனை செய்துவிட்டு, பின் அது பொய்யான செய்தி என்று உறுதி படுத்தப்பட்டால் தளத்தில் இருந்து நீக்கிவிடும். இப்படித்தான் பொய்யான செய்திகள் டிவிட்டரில் இருந்து நீக்கப்படும். ரஜினியின் வீடியோவும் பொய்யான செய்தி என்பதால் இப்படி நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று முறைகளில் எதோ ஒரு முறையில் ரஜினியின் வீடியோ பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்.
டிவிட்டர் என்ன செய்தது
ரஜினியின் வீடியோ இணையத்தில் வெளியானதும் பெரிய அளவில் வைரலானது. பலரும் இதை தொடர்ந்து ஷேர் செய்தனர். அதனால் உடனே அதை டிவிட்டர் நிறுவனம் உண்மையா என்று சோதனை செய்துள்ளது. அது பொய்யான செய்தி என்றதும் நீக்கி உள்ளது. அதேபோல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 12 மணி நேரத்தில் கொரோனா சாகாது என்ற விளக்க கட்டுரைகளையும் டிவிட்டர் நிறுவனம் புரோமோட் செய்து வருகிறது.