கரையான் போல ஊழல் தனது வேர்களை பரப்பி சமூகத்தை செல்லரிக்க வைத்துவிட்டது: சென்னை ஹைகோர்ட் ஆதங்கம்
சென்னை: ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
1500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஹைகோர்ட்டில் மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது, ஹைகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு.

தலையிட முடியாது
இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை ஹைகோர்ட் முடித்து வைத்தது.

ஒழுங்கு நடவடிக்கை
அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பதவி உயர்வு கூடாது
ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும் லஞ்சம் பெறுவது என்பது, தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரித்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர். தகுதியான, திறமையான பலர், குறைந்த ஊதியத்தில், ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள், அனைத்து பண பலன்களை பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வேறு ஒரு வழக்கின்போது, ஆதங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications