முக கவசம் அணிவது கட்டாயம்... தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் - மா.சுப்ரமணியன் உறுதி
முகக் கவசம் அணிதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில திரும்பப் பெறப்படவில்லை,இன்னும் நடைமுறையில் உள்ளது என்று மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனாவை தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியிருந்தது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது.

சுற்றறிக்கை
இந்நிலையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
டெல்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 கொரோனா வழக்குகள் இருந்த நிலையில்,நேற்று 632 ஆக உயர்ந்துள்ளன.1 சதவீதத்திற்கு கீழே இருந்து கொரோனா பாசிடிவ் சுமார் 5 சதவீதத்திற்கு சென்றுள்ளது. மேலும்,உ.பி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவிலும் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம்,சர்வதேச அளவில் ஒமைக்ரான் வழக்குகளும் ஒரு நாளைக்கு 7.45 லட்சம் என்ற அளவில் உள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை
தமிழகத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும்,கொரோனா வழக்குகள் ஒரு நாளைக்கு 25க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 30 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் லேசாக உயர்ந்துள்ளன. சுமார் 8 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதால்,கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட கேஸ்கள் இன்னும் பதிவாகி வருவதைக் கவனிக்க வேண்டும். மேலும் கொரோனா கேஸ்களின் பாதையை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

முக கவசம் கட்டாயம்
எனவே,பொது இடங்கள் மற்றும் நெரிசலான இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிதல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. முகக் கவசம் அணிதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில திரும்பப் பெறப்படவில்லை,இன்னும் நடைமுறையில் உள்ளது.

பொது இடங்களில் அவசியம்
மருத்துவமனை வளாகங்களிலும்,நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடையேயும்,பொது இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பது,ஆபத்தை அதிகரிக்கும். மேலும்,குறைந்த அளவிலான தடுப்பூசிகள் உள்ள பகுதிகளில் நபர்களின் வரிசைப் பட்டியல் பின்தொடரப்பட வேண்டும் மற்றும் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மா.சுப்ரமணியன் உறுதி
இந்தநிலையில் கொரோனாவை தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications