சென்னையில் அவசிய பணிகளுக்காக இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்
சென்னையில் அவசிய பணிகளுக்காக இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் தினசரியும் 30ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழக்கம் போல இயங்குகின்றன. காய்கறிகள், மளிகை, பல சரக்கு கடைகள், இறைச்சி கடைகள் தினசரியும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவுள்ளன.
மாநிலம் முழுவதும் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, டாக்சிக்கள் கூட இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்தியவாசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, முன்களப் பணியாளர்கள் வழக்கம் போல பணியை தொடருவதால் அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இன்று சென்னையில் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் சென்னையில் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.