19 நாளில் மிகப்பெரிய மாற்றம்.. சென்னையில் ஒகே.. மற்ற மாவட்டங்களில்.. கிராமங்களில்?
சென்னை: தமிழகத்தில் சென்னையில கட்டுக்குள் கொரோனா இருந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஜூலை மாதத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் (ஒருசில தவிர) 100க்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குக்கிராமங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கடந்த ஜுன் மாதம் கொரோனா பரவல் குறைவாக இருந்தது. அதேநேரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் கொரோனா பரவல் கடுமையாக இருந்தது. இதனால் ஜூன் மாதம் மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டததால் அச்சம் அடைந்த மக்கள் ஆளைவிட்டால் போதும் என்ற நோக்கில் ஊரங்கு அமலுக்கு வருவதற்கு முதல் நாள் சாரைசாரையாக ஊருக்கு சென்றனர். அன்றைக்கு செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிக வாகனங்கள் சென்றதால் சுங்க கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இலவசம் என அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியது. கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
முடிவை மாற்றி அரசு
இதற்கிடையில் அடுத்த ஒரு வாரத்தில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஜுலை 1 முதல் பேருந்து போக்குவரத்தை தடை செய்த அரசு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் என அறிவித்தது. மண்டலங்களுக்குள் செல்ல இ பாஸ் தேவையில்லை என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
இபாஸ் இல்லாமல் சாத்தியமில்லை
உண்மையில் கொரோனா பரிசோதனைகள், கெடுபிடிகள் தீவிரமானது இதன் பிறகு தான். தமிழகத்தில் அதன்பிறகு போலீசார் சோதனைகளை கடுமையாக தீவிரப்படுத்தினர். போலி பாஸ் எடுத்து செல்பவர்களை பிடித்து கைது செய்தனர். ஈ பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக மாற்றிக்காட்டியது தமிழக போலீஸ். எனினும் எல்லா மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகமானது.
கோவையிலும் பரவல்
மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் என அத்தனை தென்மாவட்டங்களிலும் கொரோனா மோசமாக பரவ ஆரமபித்தது. தென்மாவட்டங்களில் தான் நிலைமை இப்படி என்றால், நிலைமைக்கட்டுக்குள் இருந்து வந்த கோவை, ஈரோடு, திருப்பூர், சேலத்தில் கொரோனா பரவல் அதிகமானது. குறிப்பாக கோவையில் கொத்துக்கொத்தாக பரவ ஆரம்பித்துள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணிக்கும் தொற்று பரவியது.
வேலூரில் கிடுகிடு
வட மாவட்டங்களா வேலூர் மண்டலத்தில் 10, 20 என்று இருந்த கொரோனா, கட்டுக்கடங்காத வேகத்தில் பரவியது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் கொரோனா கடுமையாக உயர்ந்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி வட்டாரங்களில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் கொரோனா பரவல் இன்றும் மோசமாகவே உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் குறைந்த அளவு இருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது இருமடங்காகி உள்ளது. உயிரிழப்பும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஜூலை எப்படி
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை 90,167 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. சென்னையில் மட்டும் 58, 419 தொற்றுகளும், மற்ற மாவட்டங்களில் 31, 748 தொற்றுகளும் கண்டறியப்பட்டு இருந்தது. ஆனால் ஜூலை 18ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் பதிவான 1, 65, 714 கொரோனா தொற்றுகளில் சென்னையில் 84, 193 தொற்றும், மற்ற மாவட்டங்களில் 81,116 தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி வரை சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 31,748 தொற்றுகள் மட்டும் பதிவாகி இருந்தது. இந்நிலையில். கடந்த 19 நாட்களில் மட்டும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை (ஜூலை 19 ம் தேதி) 84,834 ஆக அதிகரித்துள்ளது.
கிராமங்களிலும் பரவல்
இந்த 19 நாட்களில் கிராமங்களிலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுதான் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. குணம் அடைந்ததோர் எண்ணிக்கை 1,17,915 ஆகவும், ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 50,294 ஆகவும் உள்ளது. பரிசோதனை எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் கொரோனா பரவல் வேகமாக கண்டறியப்படுகிறது. இதுவே தொற்று அதிகமாக தெரிய காரணம் என்றும் சொல்கிறார்கள்.