தமிழகத்தில் மொத்தம் 10 வேரியன்ட் இருக்கு.. புதிய மியூடன்ட் வந்தால் மட்டுமே 3வது அலை.. விஜய் ஆனந்த்
சென்னை: புதிய மியூடன்ட் வந்தால் மட்டுமே கொரோனா வைரஸின் 3ஆவது அலை வரும் என கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் விவரித்துள்ளார்.
Recommended Video
கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஆர்வத்தின் பேரில் மக்களுக்கு வழங்கி வருகிறார் விஜய் ஆனந்த். இவர் அளிக்கும் விவரங்கள் எளிதாக மக்களுக்கு புரிவது போல் உள்ளன. மேலும் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் எழுகின்றன.
இதுகுறித்து டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி கேள்வி பதில் வடிவில்:
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது வதந்தி- மத்திய அரசு விளக்கம்
மழைக்காலம்
கே: கடந்த இரு ஆண்டுகளாக அதாவது 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கோடை காலத்தில் நம் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா
ப: கொரோனாவுக்கு கோடை, மழைக்காலம் என்றெல்லாம் ஒன்று கிடையாது. போன அலையில் கோடைக்காலம் வந்துவிட்டது, இனி கோவிட் வராது என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது தவறான செய்தியாக போய்விட்டது. சம்மரிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. லண்டனில் கடந்த ஆண்டு கொரோனா 2ஆம் அலை தொடங்கியது. அது பி 1.1.7. உருமாறிய கொரோனா. அப்போது லண்டனில் மழைக்காலம்தான். அங்கு முடிந்த 4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்தியாவில் வந்தது.
வேக்சின்
கே: சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தடுப்பூசி போட்ட நகரங்களில் முன்னணியில் இருப்பது சென்னை. வேக்சின் போட்டதற்கும் தொற்று குறைந்ததற்கும் ஏதேனும் தொடர்பிருக்கா?
ப: சென்னையில் டாப்பில் இருக்கிறது என சொல்ல முடியாது. சென்னையில் நேற்று 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளார்கள். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தோமேயானால் சென்னை முன்னணியில் இருக்கிறது. அதிகம் தடுப்பூசி போட்ட நகரங்களில் 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதால் டெல்லிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பிறகு மும்பையில் 46 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போட்டுள்ளார்கள். பெங்களூரில் 44 லட்சம் பேருக்கும் புனேவில் 37 லட்சம் பேருக்கும் கொல்கத்தாவில் 27 லட்சம் பேருக்கும், சென்னையில் 26 லட்சம் பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மெட்ரோ நகரங்களில் சென்னை 6 ஆவது இடத்தில் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அதிக கொரோனா தடுப்பூசி போட்ட நகரங்களை பார்த்தால் சென்னை 2 அல்லது 3 இடத்தில் இருக்கும். சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை வைத்து பார்த்தோமேயானால் சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 40 லட்சம் பேர் உள்ளனர். இதில் முதல் டோஸ் போட்டவர்கள் 20 லட்சம் பேர். எனவே 50 சதவீதம் சென்னை மக்கள் தடுப்பூசி போட்டதாகவே தெரிகிறது. சென்னையில் இரு டோஸ்களையும் 60 சதவீதம் பேர் போட்டுள்ளார்கள். எனவே இரு டோஸ்களையும் போட்டவர்களில் இந்தியாவில் சென்னை முன்னணி வகிக்கிறது.
தொற்று குறைவு
கே: கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்தால் பரவல் குறையும் என்பதை உங்கள் டேட்டாவால் நிறுவ முடியுமா, இல்லை தடுப்பூசி கொரோனா பரவலை குறைக்க இன்னும் நாள் ஆக வேண்டுமா?
ப: அமெரிக்காவில் தடுப்பூசிகள் நிறைய போடப்பட்டதால் அங்கு 3ஆவது அலை தடுக்கப்பட்டது. அமெரிக்காவின் கொரோனா பரவல் குறித்த கிராஃப் பார்த்தால் அதில் பெரிய ஸ்பைக் இருக்கும். அதன் பிறகு இரு மாதங்கள் கழித்து சிறிய ஸ்பைக் இருக்கும். அந்த நேரத்தில்தான் தடுப்பூசியை தீவிரமாக போட்டார்கள். தடுப்பூசி போட்டவுடன் 3ஆவது அலை தீவிரமாகாமல் தடுக்கப்பட்டது. சென்னையின் டேட்டாவை பார்த்தால் அது இனிதான் நமக்கு தெரியவரும். கடந்த 2, 3 வாரங்களாகத்தான் தமிழகத்தில் வேகமாக தடுப்பூசி போடுவது அதிகரிக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை டெல்டா வேரியண்ட்தான் அதிகமாக பரவுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு டெல்டா வேரியண்ட்தான் 70 சதவீதம் காரணம் என சுகாதாரத் துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. டெல்டா வேரியண்ட்களுக்கு இரு டோஸ்களும் தடுப்பூசி போட்டால்தான் நல்லது. இப்போதைக்கு ஒரு டோஸ் மட்டுமே நாம் போட்டுள்ளோம். 2 டோஸ்கள் போட்டால் மட்டுமே நோய் தொற்று முற்றிலும் அகற்றப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் 3ஆம் அலை தீவிரமடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசிகளால் தொற்று குறைந்து வருவது நமக்கு இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
கொரோனா அதிகம்
கே: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறதா
ப: கடந்த அலை உச்சத்தை அடைந்ததே தமிழகம், சென்னைக்கு ஜூன், ஜூலை. அதன் பிறகு இரு மினி பீக்ஸ், ஆகஸ்ட் முடிவில் செப்டம்பர் தொடங்கிய போதும், அக்டோபரிலும் வந்தது. லாக்டவுன் ரிலீஸ் செய்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பெரிய ஸ்பைக்ஸ் வர வாய்ப்பில்லை , கடந்த அலையை போல் மினி ஸ்பைக்ஸ் வர வாய்ப்புள்ளது.
முன்னெடுப்புகள்
கே: தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வேறு ஏதேனும் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமா
ப: தமிழக அரசு சிறப்பாகத்தான் செயல்படுகிறது. கடந்த மாதம் முழு லாக்டவுன் போட்டு கொரோனா பரவல் குறைகிறது, இந்த நடவடிக்கைகள் சரியாகவே போய் கொண்டிருக்கிறது. மொத்தமாக அரசிற்கு மட்டுமே நாம் சொல்ல முடியாது. அரசு என்ன செய்தாலும், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கொரோனாவை நம்மால் தடுக்க முடியும். கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களுக்கு செல்லக் கூடாது, இரட்டை முகக் கவசம் அணிய வேண்டும். காற்றோட்டம் இல்லாத இடங்களில் கொரோனா பரவல் 80 முதல் 90 சதவீதம் அதிகம். சுய ஒழுக்கம், சுய உணர்வு மக்களிடம் இருந்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். அடுத்த அலையிலிருந்து நாம் தப்பலாம்.
குழந்தைகளை தாக்குமா
கே: மூன்றாவது அலை குறிப்பாக குழந்தைகளை தாக்குமா?
ப: மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பது எந்த டேட்டாவிலும் இல்லை. இந்தியாவில் முதல் அலையும் சரி இரண்டாவது அலையும் சரி, வெளிநாடுகளில் வந்த பிறகு இரண்டு அல்லது 3 மாதங்கள் கழித்தே வரும். 3ஆவது அலை குழந்தைகளை குறி வைத்து தாக்கும் என்றிருந்தால் அது மற்ற நாடுகளிலும் தாக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி தாக்கவில்லை. பிரிட்டனில் பலதரப்பட்ட வயதினரையும் தாக்கியது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இருக்கும் வித்தியாசம் எதுவென்றால், கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் இளைஞர்களை (35 வயதிற்குள்பட்டவர்கள்) பாதித்திருந்தது. ஆனால் இந்த இரண்டாவது அலையில் கொரோனா பாதித்தவர்களில் 22 சதவீதம் இளைஞர்களாவர். அதற்காக 3ஆவது அலை குழந்தைகளை தாக்கும் என எந்த டேட்டாவும் தற்போதைக்கு இல்லை. இதை நம்பி நாம் பீதியடைய தேவையில்லை. வழக்கம்போல் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டிற்குள்தான் உள்ளார்கள். ஆனால் பள்ளிகள் திறக்கக் கூடாது.
டெல்டா வேரியண்ட்
கே: டெல்டா வேரியன்ட் 3ஆவது அலையை தீவிரப்படுத்துமா?
ப: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்தான் டெல்டா வேரியண்ட் (B.1.617.2) என்கிறோம். இது இந்தியாவில் பரவலாகத்தான் இருக்கிறது. இரண்டாவது அலையே இந்த வேரியண்ட்டால்தான் வந்தது. மூன்றாவது அலை வர வேண்டும் என்றால் நமக்கு இன்னொரு உருமாற்ற வைரஸ் வர வேண்டும். பெரிய அலை வருகிறது என்றால் அது உருமாற்றத்தினால்தான். பிரிட்டனில் 2ஆவது அலை வருவதற்கு முன்னர் அங்கு பி.1.1.7 வந்தது. அது போல் இந்தியாவிலும் டெல்டா வேரியண்ட்டால்தான் இரண்டாவது அலை வந்தது. புதிய உருமாற்றம் எப்படி வரும் என்றால் சமூகத்தில் அதிகமாக பரவல் இருந்தால்தான் வரும். தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், செயினை பிரேக் செய்தாலும் அடுத்த உருமாற்றம் (mutant) வராமல் தடுக்கலாம். கடந்த அலைக்கும் இந்த அலைக்கும் மியூடன்ட் ஏன் வந்தது என்றால் 4 அல்லது 5 மாதங்கள் மக்கள் கொரோனா பயமின்றி சகஜநிலையில் இருந்துவிட்டார்கள். அது மரபணுமாற்றமாகி 4 மாதங்களில் அதி தீவிரமாகி டெல்டா வேரியண்ட் வந்துவிட்டது. எனவே இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு சகஜ நிலைக்கு செல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
எத்தனை வகை
கே: கொரோனா எத்தனை வகைகள் இருக்கின்றன ப: கொரோனவின் வகைகள் என பார்த்தோமேயானால் வேரியன்ட்களில் 10 இருக்கின்றன. தமிழகத்தில் பி 1.617.2, பி 1, பி 1.1.7, பி 1. 617.1 என 10 முதல் 15 வேரியன்ட்கள் உள்ளன. மெஜாரிட்டியாக தமிழகத்தில் 70 சதவீதம் பாதிப்பை கொடுப்பது டெல்டா வேரியன்ட் , ஆல்பா வேரியண்ட் 8 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கவனம்
கே: உங்கள் டேட்டாபடி எந்தெந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
ப: ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அங்கெல்லாம் டெஸ்ட் பாசிட்டிவ் ரேட்கள் அதிகமாக உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 5-க்கு மேல் இருக்கிறதோ அந்த மாவட்டங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேற்கண்ட மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது.
அதிகரிக்க வேண்டிய மாவட்டங்கள்
கே: தமிழகத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்க வேண்டிய மாவட்டங்கள் எவை
ப: சென்னை(45- 50%), நீலகிரி (33%), கோவை (23%) ஆகிய இடங்களில் அத்தனை சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். திருவண்ணாமலையில் 6 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை10 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. எனவே இங்கெல்லாம் தடுப்பூசி போடுவது அதிகரிக்க வேண்டும்.
முரண்பாடு
கே: சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்படும் கொரோனா டேட்டா சரியாக இருக்கிறதா, ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா?
ப: அரசின் டேட்டாக்கள் சரியாகவே இருக்கின்றன. அதை வைத்துதான் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எங்கு லாக்டவுன் போடலாம், எங்கு பரவல் அதிகம் இருக்கிறது உள்ளிட்ட அரசின் டேட்டாக்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அரசின் தகவல்கள் தவறாக இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் நான் ஓராண்டாக பார்த்த வரைக்கும் அவர்கள் கொடுக்கும் தகவலில் எந்த தவறும் இருந்ததில்லை.