3.50 மணிக்கு இறந்த ஜெயலலிதாவின் உடலுக்கு 4.20 மணிக்கு சிபிஆர் சிகிச்சை தந்த அப்பல்லோ மருத்துவமனை
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு நிகழ்ந்த போது மருத்துவமனையின் கருவிகளை சுத்தம் செய்யும் பயிற்சி பெறாத 3 பேரை கொண்டு சிபிஆர் செய்யப்பட்டது என ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு கடந்த 2016, டிசம்பர் 4 ஆம் தேதி என்னவானது என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4, 2016 இல் இதய செயலிழப்பு ஏற்பட்டது.
மறைந்த முதல்வரின் இறந்த நேரம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 5.12. 2016 அன்று இரவு 11.30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர்
மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரை கவனித்துக் கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியகங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 4.12.16 அன்று பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதல்வருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும்.

கார்டியோகிராம்
எக்கோ கார்டியோகிராம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோயறிதல் நடைமுறைகளால் கூட மறைந்த முதல்வர் பயன்பெற தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். அப்படியிருக்கும் போது மறைந்த முதல்வருக்கு தாமதமாக சிபிஆர் செய்யப்பட்டது. சாட்சிகளின் சாட்சியத்தின்படி மாலை 4.20 மணிக்கு சிபிஆர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

சிபிஆர்
இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட போது மருத்துவமனையின் கருவி சுத்தம் செய்பவர்கள் மதிவாணன், பஞ்சாபகேசன் மற்றும் அருண் ஆகிய மூன்று பேரால் சிபிஆர் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் சிபிஆர் சிகிச்சைக்கு பயிற்சி பெறாதவர்கள். வியக்கத்தக்க வகையில் மறைந்த முதல்வரின் உடலில் மின் முறை மற்றும் ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்ட பிறகும் அவரின் அந்த மாற முடியாத நிலையில் அவரின் உடலில் சிபிஆர் செயல்முறை தொடங்கப்பட்டது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிபிஆர்
அதாவது அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி 2016ஆம் ஆண்டு பிற்பகல் 3.50 மணிக்கே இறந்திருக்கலாம் என்ற போது அவருக்கு மிகவும் தாமதமாக சிபிஆர் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications