மாமல்லபுரத்திலிருந்து குஜராத் செல்லும் 1000 முதலைகள்.. நீதிமன்றம் போட்ட பரபர உத்தரவு.. பின்னணி
சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள முதலை பண்ணையிலிருந்து 1,000 முதலைகளை குஜராத் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்வதை தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

முதலைகளை வளர்க்க போதுமான இட வசதி குஜராத்தில் உள்ளதால் அங்கு முதலைகளை இடம் மாற்றம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் 1,000 முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விலங்கியல் மறு வாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்திருந்தன. இந்நிலையில் இதனை எதிர்த்து, சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர், விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் முதலைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அதாவது, "56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7,300 சதுர மீட்டர் இடத்தில் 1,000 முதலைகள் அடைக்கப்படவுள்ளது. எனவே முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர்.
விசாரணையில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசின் வனவிலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குள் மீட்பு மற்றும் காப்பகம் மற்றும் மாமல்லபுரம் முதலை பண்ணை நிர்வாகம் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து இன்று நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை வாசித்தனர்.
அதில், "குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குள் மீட்பு மற்றும் காப்பகத்தில் இந்த 1,000 முதலைகளை பராமரிக்க போதுமான இடவசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களிலிருந்து தெளிவாக தெரிகிறது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது" என கூறியுள்ளனர். இதன் மூலம் முதலைகள் குஜராத் மாநிலத்திற்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம். அதற்கான தயாரிப்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications