கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது? முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா?
சென்னை: முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி கோவிந்தராஜ் மர்மமாக மரணம் அடைந்த விவகாரத்தில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் லோக்சபா எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராஜ் என்பவர் மர்மான முறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கோவிந்தராஜின் உடலில் காயம் இருப்பதால் நிறுவனத்தில் உள்ளவர்கள் தாக்கியதால்தான் உயிரிழந்தார் எனக் கூறி அவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி காடாம்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜின் மரணம் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொழிற்சாலை உரிமையாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
முந்திரி ஆலைத் தொழிலாளி மர்ம மரணம்.. கடலூர் திமுக எம்.பி-க்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
நேர்மையான அதிகாரி தேவை- ராமதாஸ்
இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கை நேர்மையான அதிகாரி ஒருவர் விசாரிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி உடல் முழுக்க காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது! ஆனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் தீபா பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளானவர் என்றும், இந்த வழக்கில் நீதி கிடைப்பதை தடுக்கவும், எதிரிகளை காப்பாற்றவும் தான் அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளூர் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடுவதில் தவறில்லை. ஆனால், நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் கடலூர் எம்.பி. முந்திரி ஆலை மர்மச்சாவு வழக்கில் துணை கண்காணிப்பாளர் நிலை அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
கொலை வழக்காக பதிவு?
இந்த நிலையில் கோவிந்தராஜின் மரணம், கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும், திமுக எம்.பி.ரமேஷை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் கடலூர் மாவட்ட காவல்துறை அனுப்பி வைத்த ரிப்போர்ட்டை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளனர் உயர் அதிகாரிகள். திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ரமேஷ் தனது எம்.பி. பதவியை முதலில் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வதுதான் திமுகவுக்கும் ஆட்சிக்கும் சரியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்ய உத்தரவு?
இதனையடுத்து, லோக்சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரமேஷுக்கு சொல்லப்பட்டு விட்டதாம். ஆனால், லோக்சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் ; என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள் என திமுகவின் அதிகார மையங்களிடம் அபயக்குரல் எழுப்பியிருக்கிறாராம் ரமேஷ். ஆனால் அந்த அதிகார மையங்களோ கட்சி தலைமை என்ன கட்டளையிட்டுள்ளதோ அதை செய்யுங்கள்- இந்த விசயத்தில் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஒதுங்கி கொண்டுவிட்டனவாம்.
பாலியல் விவகாரமா?
இதனிடையே மரணமடைந்த கோவிந்தராஜ் மீது ரமேஷ் தரப்பில் திமுக தலைமைக்கு சொல்லப்பட்டிருப்பது திருட்டு புகார். ஆனால், உண்மையில் இதில் பாலியல் விவகாரமும் இருக்கிறதாம். அதாவது, மது மற்றும் மாதுக்கள் விசயத்தில் சர்ச்சைக்குரிய நபர் ரொம்பவும் வீக்காம். முந்திரி ஆலைக்கு வந்த உடனேயே மது போதையில் சல்லாபங்களை சர்ச்சைக்குரிய நபர் அரங்கேற்றுவாராம். இதனை எல்லாம் கோவிந்தராஜ் பார்த்ததாகவும், அது தொடர்பாக கோவிந்தராஜிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில்தான் கோவிந்தராஜ் கொல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.