கடுமையான சூறாவளி அவதாரம் எடுத்த மாண்டஸ்! கொட்டித் தீர்க்கும் கனமழை! இத்தனை மாவட்டங்களில் விடுமுறையா?
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், நாளை முற்பகல் வேளையில் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியது. வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் பின்னர் புயலாக மாறியது.
மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை சூறாவளி புயலாக மாறும் எனவும் அதனைத் தொடர்ந்து மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பட்டது.
கரையைக்கடக்கும் மாண்டஸ்..தட்டி எடுக்கப்போகும் கனமழை..பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்
கடுமையான சூறாவளி புயல்
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், நாளை முற்பகல் வேளையில் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலில் மையம்
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காள விரிகுடா, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும் 7.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.
மகாபலிபுரத்தில் கடக்கும்
டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை வரை கடுமையான சூறாவளி புயலாக தொடரும் மாண்டஸ், பின்னர் டிசம்பர் 9 ஆம் தேதி முற்பகல் வேளையில் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்தை சுற்றி ஒரு சூறாவளி புயலாக 65-75 கிமீ வேகத்தில் 09 ஆம் தேதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் கடக்கும் என கருதப்படுகிறது.
கனமழை
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாண்டஸ் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்தே பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில். சென்னை நுங்கம்பாக்கத்தில் 1.8 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 1.5 மில்லி மீட்டர், கொடைக்கானலில் 6 மில்லி மீட்டர், நாகையில் 8 மில்லி மீட்டர் கடலூரில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
17 மாவட்டங்களில் விடுமுறை
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.