தங்க மனம் வாழ்க...கொரோனா நிதி கொடுத்த காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்
இரவு நேர காவலாளி ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை: தங்க மனம் வாழ்க என்று அட்சய திருதியை நாளான இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஒருவரை நேரில் அழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். முதல்வரே பாராட்டிய அவரது பெயர் தங்கதுரை. இரவு நேரங்களில் கண் விழித்து காவல் காத்து பெற்ற சம்பளம் பத்தாயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார் அதற்காகவே முதல்வரிடம் பாராட்டும் பரிசும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்கள் அளிக்கும் பணம் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தனியார் தொழில் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர்.
தங்கதுரை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் தங்கதுரை என்பவர் ஒரு மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
கொரோனா நிவாரண நிதி
சென்னை சாலிகிராமத்தில் பணியாற்றி வரும் தங்கதுரைக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள கரைகண்டம் கிராமம். சென்னையில் தங்கி பணியாற்றி வரும் அவர், முதல்வரை சந்தித்து தனது சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருக்குறள் புத்தகம் பரிசு
இதையடுத்து தனது பணத்தை அரசு கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். இதையறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின், காவலாளி தங்கதுரையை நேரில் அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் வைத்திருந்த திருக்குறல் புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அவரை பாராட்டி தனது ட்விட்டர், முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பாராட்டு
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன். அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்! தங்கமனம் வாழ்க! என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தங்கதுரையின் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.