மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்..சேகர்பாபு
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோவில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு மதுரை,ராமேஸ்வரம் திருவண்ணாமலை கோவில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாப
சென்னை: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 750 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாள் முழுவதும் அன்னதானம்
இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், 4.9.2021 முதல் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் மேலும் 3 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

3 கோவில்களில் அன்னதானம்
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோவில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பசுமடங்கள்
மேலும் பத்து திருக்கோவில்களில் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 121 திருக்கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பசுமை எரிவாயு திட்டம்
பசுமைத் திருக்கோவில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோவில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும். திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications