நீட் தேர்வை அதிமுகவால் ஏன் தடுக்க முடியவில்லை? முதல்வர் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்!
சென்னை: சட்டசபையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றாலும், திமுக அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் அதிமுக ஆட்சியில் ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்விக்கு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்ட, ஆளுநர் ரவி உரையுடன் திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பல வார்த்தைகளை விடுத்தும், சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி எம்எல்ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை வந்தனர். இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், நீட் தேர்வு தொடர்பான விவாதம் வந்தது.

நீட் தேர்வு விவகாரம்
அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்த போது தான் நீர் தேர்வு கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதுதான், நீட் தேர்வு செய்யப்பட்டது. திமுகவை மீறி தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஸ்டாலின் கேட்ட கேள்வி
அதிமுக ஆட்சியில் இருந்த போது, ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக ஆட்சியில் அனைத்து முயற்சிகளும்ம் எடுக்கப்பட்டது. ஆனால் எதுவும் பலனிளிக்கவில்லை. அனைவரும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்று பதிலளித்தார்.

மா.சுப்பிரமணியன் விவாதம்
இதன்பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசுகையில், நீட்தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்த பெருமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சாரும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு சென்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சர் திருப்பி அனுப்பினாரே, அந்த தகவலை மறைத்தீர்களா, இல்லையா?, ஒட்டுமொத்தமாக முழு பொறுப்பேற்க வேண்டியவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று குற்றம்சாட்டினார்.

ஐ.பெரியசாமி தகவல்
இதனிடையே அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், நுழைவுத் தேர்வை அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை பெற்றதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதை சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications