டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்.. வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய மேஜர் விஷயம்
சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இந்த நிதியாண்டில் வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி வசூலாகி உள்ளது. தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 67 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக மார்ச் 31ம் தேதியுடன் இறுதிக் கணக்கு முடியும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம் ஆக உள்ளது. அதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்குரிய (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி கணக்கை தனிநபர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைவரும் 2024-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

இதன்படி வருமானம் ₹ 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் , வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹ 1,000 என்றும் மேலும் கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.
அதாவது வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்துக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் ஆயிரம் ரூபாயும், ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்திருந்தார்கள். .
இந்நிலையில் டிசம்பர் 31 வரை அபராதத்துடன் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 31-ந் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தனர். அதன்படி, 2023-24-ம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்திருக்கிறார்கள். அப்படி வருமான வரி தாக்கல் செய்தவர்கள் மூலம் அரசுக்கு ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 67 கோடியாக வருமான வரியாக பங்களிப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே நேரடி வரியான வருமான வரி மூலம் 2023-24-ம் நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 56.72 சதவீதம் என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அபராதத்துடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளைக்குள் முடிவடைகிறது.
இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய விரும்புபவர்கள் நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில் எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் பிரச்சனை ஏற்படும். பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டு பயணம் போன்றவற்றிலும் சிக்கல் வரும் என்கிறார்கள். மேலும் குற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனிடையே பழைய வருமான வரி முறையைப் பொறுத்தவரை பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். PPF அல்லது ELSS போன்றவற்றில் முதலீடுகளுக்கான விலக்குகளை பெற பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை குறைக்க முடியும். அதேபோல் லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் எடுத்துள்ளவர்கள் என்றால் அதையும் விலக்காக 80சியில் முடியும். குழந்தைகளின் கல்வி கட்டணம், வீட்டு வாடகை போன்றவற்றை 80 சியில் காட்டி நிவாரணம் பெற முடியும்.
இதேபோல் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் குடும்பத்திற்கு 25000 வரையிலும், முதியவர்கள் என்றால் 50000 வரை வருமான வரியில் கழித்துக் கொள்ள முடியும்.. பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000த்தை என்பிஎஸ்இல் முதலீடு செய்து' , ரூ. 1.5 லட்சம் வரம்பிற்கு மேலும் வரி விலக்கு பெற முடியும் (2லட்சம்). இதேபோல், உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் லீவ் டிராவல் அலவன்ஸ் பெறுகிறீர்கள் என்றால் , உங்கள் பயணத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தை விலக்காக கோரி சேமிக்க முடியும்.
அதேபோல் வீட்டுக் கடன் வாங்குபவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 24 (பி) பிரிவின் கீழ் வட்டி செலுத்துவதன் மூலம் ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோர முடியும். இப்படி பழைய வருமான வரி முறைப்படி 10 லட்சம் வரை வருமானத்திற்கு வரி செலுத்தாமல் இருக்க முடியும். புதிய முறைப்படி 7.25 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையியிருக்காது.












Click it and Unblock the Notifications