கன்னியாகுமரியை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..புயலாக மாறுமா? வானிலை சொல்வதென்ன?
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியே கன்னியாகுமரியை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்வெடுத்து வரும் நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் புயல் வருமா? கனமழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை நிகழ்வுகளை கணிக்கும் தனியார் ஆய்வாளர்களும் கிறிஸ்துமஸ் நாளில் இந்த ஆண்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர். இதனிடையே தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 25ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிறிஸ்துமஸ் நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியே கன்னியாகுமரியை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications