அதிமுக சார்பில் சட்டசபைக்கு நாங்கள் வந்து விட்டோம்.. அது அவங்க கிட்ட கேளுங்க - ஓபிஎஸ் நறுக்
சென்னை: ஜனநாயகக் கடமையாற்றவே நாங்கள் அதிமுக சார்பில் சட்டசபைக்கு வந்திருக்கிறோம். அவர்கள் பற்றிய கேள்விகளை எங்களிடம் கேட்க வேண்டாம் அவர்களிடம் கேளுங்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இன்றைய முதல்நாள் கூட்டத்தை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதிமுக பொன்விழா ஆண்டு என்பதால் அனைவரும் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு சென்று கொடியேற்றி கொண்டாடினர்.

ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

எதிர்கட்சி துணைத்தலைவர்
ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால்,ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அளித்தனர்.

சபாநாயகர் அப்பாவு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் சபாநாயகர் எந்த மாற்றமும் செய்யவில்லை. சட்டசபையில் அதிமுக வரிசை இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ஓபிஎஸ் அதே சீட்
எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்கப்படவில்லை. வழக்கம் போல் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.

எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பு
அதிமுக பொன்விழா கொண்டாட்டம் நடைபெறுவதால் காலையிலேயே எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுக அலுவலகத்திற்கு சென்று விட்டனர். ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் இன்றைய தினம் சட்டசபை முதல்நாள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இரங்கல் தீர்மானம்
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் திரு எஸ்.சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், சட்டசபை கூட்டத்திற்கு எங்களுக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக சார்பில் நாங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றோம் என்று கூறினார்.

அலுவல் ஆய்வுக்கூட்டம்
சபாநாயகர் நடத்தும் அலுவல் ஆய்வுக்குழுவில் பங்கேற்பீர்களாக என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ஏற்கனவே சபாநாயகரை சந்தித்து வந்திருக்கிறோம். எங்களைப் பொருத்தவரைக்கும் அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு தருவோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

அவங்களிடம் கேளுங்கள்
சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பக்கத்தில் அமர இஷ்டமில்லாமல்தான் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தாரா என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், நாங்கள் எங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டோம் அவர்கள் பற்றிய கேள்விக்கு அவர்களிடம் தான் கேட்டு பதில் பெற வேண்டும் என்று கூறினார்.

4 நாட்கள் சட்டசபை
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வரும் வியாழக்கிழமை வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நாளை முதல் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பார்களா? அல்லது புறக்கணிப்பார்களா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications