சென்னையை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெங்கு மழை பெய்யும் - புவியரசன் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை மூன்று இடங்களிலும் , மிக கனமழை 23 இடங்களிலும் பதிவாகியுள்ளது.

அதிகனமழை
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

வட மாவட்டங்களில் மழை
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை. விழுப்புரம், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

45 கிமீ வேகத்தில் காற்று வீசும்
நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது . இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடல் பகுதிக்கும் , வட தமிழக கடல் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மழை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி ,கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகிற 14ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகிற 15ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகனமழை
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது மிதமான மழையும் கரையைக் கடந்த பின்னர் அதிகனமழையும் பெய்யும் எனவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
Recommended Video

சூறாவளிக்காற்று வீசும்
இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications