அரபிக்கடலில் உருவாகும் புயல்... தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் - மீனவர்களுக்கும் அறிவிப்பு
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 15ஆம் தேதி கனமழை மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இன்று முதல் 16ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்திலும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.
கத்திரி வெயிலை குளிர்விக்க வரும் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்க போகும் மழை
அதிகனமழை பெய்யும்
இன்று முதல் 17ஆம் தேதி வரை நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15ஆம் தேதி கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை
வரும் நான்கு நாட்களும் காரைக்காலை, புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
சூறாவளி காற்று
15 மற்றும் 16ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்பதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.