காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது - 3 நாட்களுக்கு கனமழை இருக்கு - கவனம் மக்களே
வங்கக் கடலில் வரும் 10ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10 முதல் 12ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுவில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. பென்னாகரத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. சோளிங்கரில் 5 செமீ மழையும், கிருஷ்ணகிரியில் 4 செமீ மழையும், எருமைப்பட்டி, தெப்பம்பட்டியில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
பாலக்கோடு, மன்னார்குடி, வாடிப்பட்டி, தாளவாடி, சின்னக்கல்லார், ஒரத்தநாடு, பெண்ணை அணை, மஞ்சலாறு போன்ற ஊர்களில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் நீலகிரி,கோயம்புத்தூர்,புதுக்கோட்டை ,கிருஷ்ணகிரி ,ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 11ஆம் தேதி வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
12ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதி, மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதி, தெற்கு கடல் பகுதி அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications