குஷ்பு பற்றி ஆபாசம்.. தேசிய மகளிர் ஆணையத்தில் திமுக சைதை சாதிக் ஆஜர்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பு
சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி குறிப்பாக குஷ்பு பற்றி ஆபாசமாக மேடையில் பேசிய திமுகவின் சைதை சாதிக் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி தனது செயலுக்கு ‛நிபந்தனையற்ற மன்னிப்பு' கேட்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார்.
திமுகவை சேர்ந்தவர் சைதை சாதிக். இவர் திமுக சார்பில் நடக்கும் பல்வேறு கூட்டங்களில் கட்சி சார்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆர்கே நகரில் திமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சைதை சாதிக், பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

நடிகைகள் பற்றி ஆபாச பேச்சு
அப்போது அவர் பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம்(தற்போது பாஜகவில் விலகல்), கவுதமி ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி பேசியது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக நடிகை குஷ்பு பற்றி ஆபாசமான முறையில் முகம் சுளிக்கும் வகையில் சைதை சாதிக் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் சைதை சாதிக்கை கண்டித்தனர். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் சக மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' என ட்விட்டரில் குஷ்புவிடம் கூறி இருந்தார்.

போலீஸ் வழக்குப்பதிவு
மேலும் சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சைதை சாதிக் மன்னிப்பு கோரினார். தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சு வருத்தத்தை அளித்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார். ஆனால் இந்த மன்னிப்பை குஷ்பு ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பவம் குறித்து பாஜக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சைதை சாதிக் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகளிர் ஆணையத்தில் புகார்
மேலும் குஷ்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் சைதை சாதிக்கிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தமிழக போலீசாரிடம் அறிக்கை கேட்டு இருந்தது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும்படி சைதை சாதிக்கிற்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

மன்னிப்பு கேட்ட சைதை சாதிக்
அதன்படி சைதை சாதிக் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் முன்பு ஆஜரானார். அப்போது சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி சர்மா ரேகா விசாரணை நடத்தினர். இந்த வேளையில் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொள்வதாக சைதை சாதிக்கு எழுத்துப்பூர்வமாக எழுதி தேசிய மகளிர் ஆணைய தலைவி சர்மா ரேகாவிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications