இனி இதெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.. போலீசாருக்கும் செக் வைத்த சைலேந்திரபாபு! ஹெல்மெட் கட்டாயம்
சென்னை: காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதி. ஆனால் இந்த விதிகளை வாகன ஓட்டிகள் சிலர் மதிப்பதில்லை.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், காரில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட்டை அணிய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

ஹெல்மெட் கட்டாயம்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காரில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்றும், அதேபோல இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருசக்கர வானத்தில் பின்னாால் அமர்ந்து பயணிப்பவர்களில் 90% பேர் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வந்துள்ளனர். இப்படி இருக்கும் நிலையில்தான் வாகன போக்குவரத்து விதியில் புதிய மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இன்றி பயணிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அபராத தொகை வெறும் ரூ.100ஆக இருந்தது.

நெருக்கடி
இதனையடுத்து மாநிலம் முழுவதும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் உட்பட அரசியல் கட்சியினர் பலரும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனாலும் மத்திய அரசு இந்த எதிர்ப்புகளை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கையில், சென்னை, உள்ளிட்ட பெரு நகரங்களில் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டுபவர்களில் சிலர் தாங்கள் போலீஸ் என்று கூறி அபராதத்திலிருந்து தப்பித்து வந்தனர். இது போக்குவரத்து காவல்துறையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பறிமுதல்
ஒவ்வொரு முறையும் இவர்களை பிடிக்கும் போதும் தாங்கள் போலீஸ் என்று சொல்வதால் போக்குவரத்து போலீசாரும் வேறு வழியின்றி வாகனத்தை விட்டுவிடுகிறார்கள். அப்படி இருக்கையில் இதனை பார்க்கும் மற்றவர்கள் போலீஸ் என்றால் ஹெல்மெட் அணியக்கூடாதா? என கேள்வியெழுப்பியுள்ளனர். இதனால் போக்குவரத்து போலீசார் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி வருகின்றனர். மட்டுமல்லாது சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து போலீசாரின் வேலைக்கும் ஆபத்து நேர்ந்துவிடுகிறது. எனவே போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சரிக்கை
இது குறித்து அவர் கூறுகையில், "ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போலீஸ் அடையாளத்தை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த குற்றங்களில் சிக்கும் காவல்துறையினர் உரிய அபராதம் செலுத்தி பின்னர் ஹெல்மெட் வாங்கிய ரசீதை காட்டினால் மட்டுமே வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications