கிளம்பிய நூதன மோசடி.. ஆதார் ஈபி லிங்க் பண்ணலயா? ‘க்ளிக்’ பண்ணா காலி.. டிஜிபி சைலேந்திரபாபு வார்னிங்!
சென்னை : உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை, நாங்கள் அனுப்பும் லிங்கில் ரூ. 10 செலுத்தினால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள், அப்படி அவர்கள் அனுப்பும் லிங்க்கில் பணம் செலுத்தினால், நமது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.
சைபர் மோசடிக்கு எல்லை கிடையாது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
உங்களின் பாஸ்வேர்ட், ஓடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
எனக்கென்னமோ அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதோ சண்டையா இருக்குமோனு தோன்றுது.. டிகேஎஸ் இளங்கோவன்
ஆதார் - மின் இணைப்பு லிங்க்
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைப்பதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி வரை, மின் கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இரண்டாயிரத்து 811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதார் - மின் இணைப்பு லிங்க் மூலமாகவும் மோசடியில் ஆன்லைன் மோசடி கும்பல் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மோசடி
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில், 'சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, "சைபர் கிரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.
ஓடிபி கேட்டால்
மேலும், எந்த ஒரு வங்கியும் ஓடிபி எண்ணை போனில் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண் யாராவது கேட்டால் அவர்களிடம் பகிரக்கூடாது. இதன் மூலம் தான் அதிகளவில் சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல்நிலையங்கள் உள்ளன. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்காக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.
எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடமும் செல்போன் உள்ளது. அனைவரின் போனிலும் இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே உலகத்தில் உள்ள எந்த நாட்டில் உள்ள நபரும், நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம் எனத் தெரிவித்தார்.
ஆதார் - மின் இணைப்பு லிங்க் மோசடி
மேலும் பேசிய அவர், "தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி, நாங்கள் அனுப்பும் லிங்கில் ரூ. 10 செலுத்துங்கள், அப்போது உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள். அப்படி அவர்கள் அனுப்பும் லிங்க்கில் பணம் செலுத்தினால், நமது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.