தென்மாவட்டங்களில் டிஜிபி ஆய்வு செய்யும் போதே.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி கொலை.. என்ன நடந்தது?
சென்னை: ஒரு பக்கம் தென் மாவட்டங்களில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் அதே நேரத்தில் கொடூர கொலை சம்பவம் ஒன்று நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ரவுடிகளை ஒழிப்பதற்காக போலீசார் மாபெரும் ஆபரேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்கள். ஸ்டார்மிங் ஆபரேஷன் என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷன் மூலம் தமிழ்நாடு முழுக்க ரவுடிகள் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
பெயிலில் வந்து தப்பி ஓடியவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள், கூலிப்படையை சேர்ந்தவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கூலிப்படைக்குதான் இந்த ஆபரேஷனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எத்தனை பேர்
இந்த ஆபரேஷனில் 21,592 ரவுடிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தட்டனர். இதில்தான் இதுவரை நடந்த ஆபரேஷனில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 52 மணி நேரத்தில் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்த 900க்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு தென் மாவட்டங்களில் அதிக அளவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள்
தென் மாவட்டங்களில், முக்கியமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இப்படி பழிவாங்கும் கொலைகள் நடப்பது வழக்கம். ஒரு குழுவை இன்னொரு குழு தாக்குவது. பழிக்கு பழி கொலை செய்வது அதிகம் நடக்கும் என்பதால் இங்கே அதிக அளவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதோடு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இன்று நேரடியாக நெல்லைக்கே சென்று தென் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தென் மாவட்டங்களில் கொலை குற்றங்களை தடுக்கும் வகையில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
அதே நேரத்தில் கொலை
இந்த ஆலோசனை நடக்கும் போதே இன்னொரு பக்கம் திண்டுக்கல்லில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிபி ஆலோசனை செய்து கொண்டு இருந்த அதே நேரத்தில் திண்டுக்கல்லில் நத்தம் அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட முன் பகையால் விவசாயி வெட்டிகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியமலையூர்- பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராசு என்பவருக்கு சொத்து தகராறு இருந்தது. இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த தகராறு கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மோதலாக வெடித்தது.
மோதல்
இதில் ராசு மகன் வெள்ளைகண்ணுவை, வெள்ளையின் உறவினர் தங்கராஜ் கொலை செய்தார். இதற்கு பழி வாங்க ராசு குடும்பம் கடந்த சில நாட்களாக கட்டம் கட்டி இருக்கிறது. இதையடுத்து இன்று வெள்ளையை ராசுவின் இன்னொரு மகன் அர்ஜுனன் திட்டமிட்டு வெட்டிக் கொன்று பழிக்கு பழி வாங்கினார். இரண்டு குடும்பத்தினருக்கும் இன்று வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சண்டையில் முடிய, ராசுவின் மகன் அர்ஜுனன் வெள்ளையை அரிவாளால் வெட்டி கொன்றார்.
கைது
இந்த கொலை தொடர்பாக தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அர்ஜுனன்(36), ஆறுமுகம்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஒரு பக்கம் தென் மாவட்டங்களில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் அதே நேரத்தில் கொடூர கொலை சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கடந்த 22ம் தேதி ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றது. ஒரே நாளில் திண்டுக்கல்லில் அனுமந்தராயன், நிர்மலா தேவி என்ற இரண்டு பேர் வேறு வேறு இடங்களில் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இன்னொரு கொலை சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.