கூடிய 27500 பேர்.. "விஜய்" என்ற ஒற்றை பெயர்.. ட்விட்டர் ஸ்பேசில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனை!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ட்விட்டர் ஸ்பேசில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட ஸ்பேஸ் தளம் பெரிய அளவில் வைரலானது. இந்தியாவிலேயே அதிக பேர் கேட்டு ரசித்த ட்விட்டர் ஸ்பேஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது ட்விட்டர் ஸ்பேஸ், கிளப் ஹவுஸ் உள்ளிட்ட ஆடியோ வழி சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் வைரலாகி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேஸ் இரண்டும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமான பிரபலங்களோடு நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதாலும், பல்வேறு பிரபலங்கள் நேரடியாக பேச தொடங்கி உள்ளதாலும் மக்கள் இடையே இந்த செயலிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்
இதேபோல் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ட்விட்டர் ஸ்பேசில் விவாதம் நடைபெற்றது. தி ரவுட் நிறுவனம் சார்பாக இந்த ஸ்பேஸ் தளம் நடத்தப்பட்டது. திவ்ய தர்ஷினி தொகுத்து வழங்கிய இந்த ட்விட்டர் ஸ்பேஸ் நேற்று பெரிய அளவில் வைரலானது. நேற்று விஜயின் பீஸ்ட் பட போஸ்டர் வெளியான நிலையில் விவாதமும் சூடு பிடித்தது. பல்வேறு நடிகர்கள், நடிகைகள் இந்த ஸ்பேசில் கலந்து கொண்டனர்.
ஸ்பேஸ்
நடிகை மாளவிகா மோகனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு விஜயுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதேபோல் இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் விஜயுடன் வேலை செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிரூத் கலந்து கொண்டார்.
அனிரூத்
கத்தி தொடங்கி பல்வேறு படங்களில் விஜய்க்கு இசை அமைத்தது குறித்தும் அனிரூத் இந்த ஸ்பேசில் பேசினார். மிகவும் ஜாலியாக, நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு விஜயை பற்றி இவர்கள் பேசியது ஆரோக்கியமாக இருந்தது. பல்வேறு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இதில் கலந்து கொண்டு ஸ்பேஸ் விவாதத்தை கேட்டனர்.
எத்தனை பேர்
நேற்று இந்த கலந்துரையாடலில் மொத்தம் 27500 பேர் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் இத்தனை பேர் இந்த விவாதத்தை கேட்டனர். இந்தியாவிலேயே அதிக பேர் கலந்து கொண்டு கேட்ட ஸ்பேஸ் விவாதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வடஇந்தியாவில் சில பாலிவுட் நடிகர்கள் கலந்து கொண்ட பெரிய ஸ்பேஸ்களில் கூட இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது.
பாய்ச்சல்
ஆனால் விஐய் கலந்து கொள்ளாத விஜயை பற்றிய ஸ்பேஸ் ஒன்றில் இத்தனை பேர் கலந்து கொண்டது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்தின் போது நடிகர் விஜய் நெய்வேலியில் எடுத்த செல்பிதான் அந்த வருடத்தில் அதிக ரீ டிவிட் செய்யப்பட்ட செல்பியாக இந்தியாவில் இருந்தது. தற்போது ஸ்பேஸிலும் விஜய் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.