இலக்கு வைத்து சரக்கு விற்ற டாஸ்மாக்... 3 நாளில் ரூ. 330 கோடி விற்று "சாதனை"
3 நாள் டாஸ்மாக் விற்பனை ரூ.330 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தீபாவளிக்கு டாஸ்மாக் எவ்வளவுக்கு விற்பனை ஆச்சுன்னு கேட்டீங்கன்னு வைங்க.. அப்படியே ஷாக் ஆயிடுவீங்க!!
தினந்தோறும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதும். அப்ப பண்டிகை என்றால் மட்டும் சும்மாவா என்ன? பண்டிகை காலங்களில் குடிமகன்கள் மது அருந்த அதிகமாக ஆசைப்படுவார்கள் என்பதால் டாஸ்மாக் விற்பனையும் இந்த காலங்களில் அமோகமாகவே நடைபெறும். அதன்படி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வருடா வருடம் இலக்கும் நிர்ணயிக்கப்படும்.
4 நாளும் தீபாவளி
இப்போது தீபாளியையொட்டி மது விற்பனை களை கட்டியது. இது போதாதென்று 4 நாள் பொதுவிடுமுறை வேறு. அதனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. எல்லாருக்கும் ஒரு நாள் தீபாவளின்னா மதுப்பிரியர்களுக்கு மட்டும் 4 நாளுமே தீபாவளிதான்!!
330 கோடி ரூபாய்
கடந்த 3 நாட்களாக நம் மாநிலத்தில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கூடவே இன்னொரு தகவலையும் சொல்லியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு மது விற்பனை ஆனதாம். தற்போது இந்த ஆண்டு 70 கோடி ரூபாய் அதிகம் விற்பனை ஆகி உள்ளதாம்!!
திருவிழா கோலம்
கடந்த நான்கு நாட்களாகவே மதுக் கடைகளில் கூட்டம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எந்தக் கடைக்குப் போனாலும் பெரும் கூட்டமாக காணப்பட்டது. அடித்துப் பிடித்துக் கொண்டு குடிகாரர்கள் பாட்டில்களை வாங்கினர். நேற்று உச்சகட்டத்தை எட்டியிருந்தது விற்பனை. நேற்று காலை முதல் இரவில் கடை நேரம் முடியும் வரை எல்லாக் கடைகளில் பெரும் கூட்டம்.
இலக்கு நிர்ணயம்
எந்தக் கடையிலும் ஸ்டாக் இல்லை என்று சொல்லக் கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாம். அதற்கேற்ப ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ள பணிக்கப்பட்டிருந்தனர். எப்படியாவது இலக்கை எட்டி விட வேண்டும் என்று எல்லாக் கடைகளுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாம்.
சியர்ஸ் தீபாவளி
இப்படி விரட்டி விரட்டி வேலை வாங்கியதால்தான் இலக்கைத் தாண்டி போக முடிந்திருக்கிறது. மிகப் பெரிய வியாபாரத்தையும் டாஸ்மாக் கடைகள் பார்க்க முடிந்ததாம். இந்தத் தீபாவளி டாஸ்மாக்கிற்கு ஒரு சியர்ஸ் தீபாவளி என்று சொல்கிறார்கள்.
தடை - குடிக்கா? வெடிக்கா?
"இதெல்லாம் ஒரு பெருமையா?" என்றும் "குடிக்கு தடை போட சொன்னா, வெடிக்கு தடை போடறாங்களே" என்றும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். இன்னும் சிலரோ "அதான் டாஸ்மாக் இவ்ளோ லாபத்தில் போகுதே, அப்பறம் ஏன் டோர் டெலிவரி செய்யக்கூடாது?" என்றும் நக்கலாக கேள்வி எழுப்பி உள்ளனர்.