விஜயகாந்த் இருந்தபோதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது.. எத்தனை தொகுதிகளில் போட்டி? பிரேமலதா பதில்!
சென்னை: தேமுதிக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் பிரேமலதா விஜயகாந்த் போக்கு காட்டி வந்தார். இதனிடையே அதிமுக நிர்வாகிகளுடனும் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வந்தார்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
குறிப்பாக மகா சிவராத்திரி நாளில் கோவை ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு நடத்தி இருந்தார். அந்த சந்திப்பின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தினார்.
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிரேமலதா விஜயகாந்த் உடன் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் இருந்தார். மறுபக்கம் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த சந்திப்பின் மூலமாக திமுக உடனான கூட்டணியை தேமுதிக உறுதி செய்தது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
தேமுதிக நிர்வாகிகளின் விருப்பம்
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைப்பதுதான். அந்த வகையில் தேமுதிக நிர்வாகிகள் விரும்பிய இந்த கூட்டணி, விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைந்திருக்க வேண்டியது. அப்போது பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்று கருணாநிதி கூறி இருந்தார்.
அண்ணன் ஸ்டாலின்
தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு, எந்த தொகுதி உள்ளிட்டவை குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். ராஜ்ய சபா சீட், தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். எங்கள் கூட்டணி சட்டசபைத் தேர்தலில அமோக வெற்றியை பெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications