ஜெயிச்சே ஆகணும்.. கேப்டன் மட்டுமே ஒரே நம்பிக்கை.. மீண்டும் ஒலிக்குமா “சிம்மக்குரல்”!
தேமுதிகவிற்கு இந்தத் தேர்தல் எந்தளவிற்கு முக்கியமானது என்பதைப் பற்றி விலாவாரியாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தேமுதிக. அனைத்து கட்சிகளும் ஏறக்குறைய தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை வெளிப்படையாகவே அறிவித்து விட்டநிலையில், சட்டசபைத் தேர்தலைத் தனித்து சந்திக்கப் போகிறதா தேமுதிக என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, முதலில் 23 தொகுதிகளைக் கேட்டதாகத் தெரிகிறது. பின்னர் படிப்படியாகக் குறைத்து கடைசியில் 18 என்ற எண்ணிக்கையில் வந்து நின்றது. ஆனால் இது எதற்குமே செவி கொடுக்காத அதிமுக, 13 இடங்களை மட்டுமே தரச் சம்மதித்தது.
அதே கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிப் பங்கீட்டை அவமானக் குறைவாகக் கருதிய தேமுதிக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொண்டாட்டிய தொண்டர்கள்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அந்தக் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியிருக்கின்றனர். 'இந்த நாள் தேமுதிகவிற்கு தீபாவளி' என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள சம்மதம் என மறைமுகமாக தூது விட்டுள்ள நிலையில், மீண்டும் அதனைக் கௌரவப் பிரச்சினையாக, 'உங்களுக்கு முன்னாடியே அரசியலுக்கு வந்தவர்கள்..' என வடிவேலு ரேஞ்சுக்கு டயலாக் பேசி கேத்து காட்டியிருக்கிறார் விஜயகாந்தின் மகன்.
விஜயகாந்த் என்ற ஒற்றைச் சொல்
அரசியல் களத்தில் தேமுதிக இந்தளவிற்கு கௌரவம் பார்ப்பதற்கும், விட்டுக் கொடுக்க மறுப்பதற்கும் பின்னணியில் அதன் கடந்த கால வெற்றிக் கதைகள் மட்டுமல்ல.. விஜயகாந்த் என்ற மனிதரும், நல்ல தலைவரும் ஒரு காரணம். ஆனால் இப்போது தேமுதிகவின் பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டுமாக மாறி இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் என்ற ஒற்றைச் சொல்லில் தான் தேமுதிகவின் அரசியல் கட்டிடமே கட்டப்பட்டுள்ளது.
ஆரம்பம் அமோகம்
கட்சி ஆரம்பித்த போது கம்பீரமாகத்தான் இருந்தார் விஜயகாந்த். ஆனால் இடையில் காலம் செய்த கோலம் அவரது உடல்நிலையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஆனாலும் தங்களது தலைவர் என்றாவது ஒருநாள் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் தேமுதிகவினர் இப்போதும் உள்ளனர். கட்சி ஆரம்பித்த போது இருந்த அதே பலம் இப்போதும் மக்களிடையே விஜயகாந்திற்கு உள்ளது. விஜயகாந்திற்கு மட்டுமே உள்ளது.. அவரது கட்சிக்கு இல்லை என்பதை இங்கே நாம் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.
ஒற்றைத் தாரக மந்திரம்
2005ம் ஆண்டு மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றைத் தாரக மந்திரத்தை கையில் அஸ்திரமாக எடுத்துக் கொண்டு தமிழக அரசியலில் கால்தடம் பதித்தது தேமுதிக. சினிமாவில் விஜயகாந்திற்கு இருந்த வரவேற்பு, நடிகர் சங்கத் தலைவராக அவர் நடந்து கொண்ட விதம் போன்றவை மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அமர்க்களமான ஆரம்பம்
கட்சி தொடங்கிய ஒரே ஆண்டிலேயே எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது தேமுதிக. திமுகவின் மெகா வெற்றியைச் சிதைத்து, அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது தேமுதிக பிரித்த வாக்குகள். 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று அரசியலில் தனக்கான தனி இடத்தைப் பிடித்தது தேமுதிக.
புதிய நம்பிக்கை
ஏறுமுகமாக 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைக்காது 10.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மாபெரும் கட்சியாக தேமுதிக வளர்ந்து வருகிறது என மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணி என்ற சிக்கலில் சிக்கியது.
புதிய அந்தஸ்து
அத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிலும் 29 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்தது. திமுகவைப் பின்னுக்குத் தள்ளி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் அந்தத் தேர்தலில் தொண்டர்களைத் தாக்கியது போன்ற சர்ச்சைகள் விஜயகாந்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்தது.
மெல்ல ஆரம்பித்த சரிவு
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் தேமுதிக அதிக சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. 2014ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட 14 இடங்களிலுமே தோல்வி. வாக்கு வங்கியும் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டு தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியில் கைகோர்த்து களம் கண்ட தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 103 இடங்களில் டெபாசிட்டை இழந்தௌ 2.39 வாக்கு வங்கியை மட்டுமே பெற முடிந்தது.
இறங்கு முகத்தில் தொகுதிகள்
இறங்கு முகத்தில் இருந்த தேமுதிகவிற்கு 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதிலும் தோற்றுப் போன தேமுதிக, வாக்கு வங்கியிலும் மேலும் சரிவைச் சந்தித்தது. இப்படியாக இறங்கு முகத்தில் இருக்கும் தேமுதிகவிற்கு இந்த சட்டசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது.
அவசரத் தேவை
இந்தத் தேர்தலில் தன் பலத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் அக்கட்சி உள்ளது. பழைய பன்னீர்செல்வமாக மாறி விஜயகாந்த் மீண்டும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் வெற்றி சாத்தியப்படும் சதவீதம் அதிகம். ஆனால் விஜயகாந்தால் பழையபடி ஆக்ரோசமாக பிரச்சாரம் செய்ய முடியுமா என்பதுதான் இங்கேயுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
காத்திருக்கும் தொண்டர்கள்
தேமுதிக என்ற கட்சியை விட, விஜயகாந்த் என்ற நடிகருக்கு இன்னமும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். நிச்சயம் அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைக்கு விஜயகாந்தை மட்டுமே மலையாக நம்பிக் கொண்டிருக்கிறது தேமுதிக. 'வரணும்.. திருப்பி வரணும்.. அதுவும் பழைய பன்னீர்செல்வமா மாறி வரணும்..' இது தான் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பற்றிய எதிர்பார்ப்பு.
தலைவர்கள் கையில் எதிர்காலம்
வீணாக கெத்து காமித்து இந்தத் தேர்தலை வீணாக்கினால் தேமுதிக தமிழக அரசியலில் மீண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகி விடும். சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் தேமுதிக உள்ளது. அக்கட்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அதன் தலைவர்கள் கையில் உள்ளது. தனித்துப் போட்டி என மீண்டும் ரிஸ்க் எடுக்குமா அல்லது பலம் வாய்ந்த வேறொரு கூட்டணியில் தேமுதிக தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.