குறைவான இடங்கள்தான் கிடைக்கும்... வேறவழியே இல்லை.. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வைகோ
சென்னை: திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து பேசி வரும் பேச்சு அந்த அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலைப் போல் இல்லாமல் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வெகுவாக குறைத்து கொடுப்பதில் திமுக உறுதியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குதான் அதிகபட்சம் 15 முதல் 20 இடங்கள் என்ற நிலை உள்ளது. மற்ற கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில்தான் தொகுதிகள் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதனைத்தான் செல்லும் இடங்களில் எல்லாம் வைகோவும் பேசி வருகிறார்.
திருத்தணியில் வேல் வாங்கிய ஸ்டாலின்... சஷ்டி திதியான இன்று திமுக விருப்பமனு விநியோகம்
வைகோ அதிருப்தி பேச்சு
இந்த முறை நிறைய தொகுதிகள் கிடைக்காது; குறைவான தொகுதிகள்தான் திமுக கொடுக்கும். இதனை ஏற்றுத்தான் கூட்டணியில் நீடித்தாக வேண்டும். வேறுவழியே இல்லை என வைகோ ஒவ்வொரு இடத்திலும் பேசி வருகிறார்.
கூட்டணிகள் அதிர்ச்சி
வைகோவின் இந்த பேச்சை மதிமுகவினர் மட்டுமல்ல கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். கடந்த தேர்தல் காலங்களில் ஒவ்வொரு முறையும் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படும் போதெல்லாம் தடாலடி முடிவை எடுத்தவர் வைகோ.
இடதுசாரிகள் நிலை?
ஆனால் இந்த முறை திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகிவிட்டதாலோ என்னவோ எத்தனை இடங்கள் கிடைத்தாலும் பரவாயில்லை என்கிற விரக்தி மனநிலைக்கு வைகோ வந்துவிட்டார். ஆனால் இடதுசாரிகளோ, வைகோவே இப்படி பேசுகிறாரே... நாமும் கடந்த காலங்களில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக அணிகள் மாறி இருக்கிறோம்..
விழிபிதுங்கும் இடதுசாரிகள்
இம்முறை வெல்லவும் வேண்டும். ஆனால் தொகுதிகளும் வேண்டும்.. திமுகவை தவிர வேறு அணியில் இதற்கு வாய்ப்பே இல்லை.. என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்குகின்றனராம்.