அசைந்து கொடுக்காத ஆளுநர் ரவி! இனி வேலைக்கு ஆகாது! டெல்லி கதவை தட்டும் திமுக கூட்டணி! ’டீல்’ ஓகேவா?
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அவரை திரும்ப பெறக் கோரி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறியிருக்கிறார் கனிமொழி எம்பி.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் கண்டனங்கள் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சிகள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆளுநர் ரவி பாஜக தலைவர் போல நடந்து கொள்வதாகவும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

கடும் கொந்தளிப்பு
இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் ஆளுநருக்கு எதிராக கடும் கொந்தளிப்பான மனநிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த விவகாரங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆர்.என்.ரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் தொடர்ந்து இந்தியா குறித்தும், இந்து மதம், சனாதனம், பாரதம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழிசை சௌந்தரராஜன்
ஆனால் அது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கும் நிலையில், தற்போது தமிழக விவகாரங்களிலும் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் தலைகாட்டி வருகிறார். ஏற்கனவே தெலுங்கானா புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் அவர் தமிழக விவகாரங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த நிலையில் ஆளுநர் ரவி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகள் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை உறுதியும் செய்திருக்கிறார் திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.

கனிமொழி எம்பி
சென்னையில் தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வேண்டுமென்று ஆளுங்கட்சிக்கு பிரச்சனைகளை தந்து வருவதாகவும் கனிமொழி பேசி இருக்கிறார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications