ஆளுநர் ரவிக்கு எதிராக கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - தேனியில் உருவ பொம்மை எரிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. தேனியில் ஆளுநர் ரவியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டசபையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, கோவையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி. சிவசாமி மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ், மௌ.குணசேகர், சி. தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், யு.கே. சிவஞானம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகம் சேதுபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஷாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே. எம். செல்வராஜ், எஸ். ராதாகிருஷ்ணன், வெ. வசந்தகுமார், கே. ரவீந்திரன், என். சந்திரன், வி.ஆர். பாண்டியன், ஏ.சி. செல்வராஜ், பேரறிவாளன், ஆதித்தமிழர் பேரவை கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேனியில் உருவ பொம்மை எரிப்பு
ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ் புலிகள் கட்சி சார்பாக தேனியில் அவரது உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினர் கைது செய்தனர். தேனி நேரு சிலை அருகே ஆளுநர் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஸ்ரீமுஷ்ணம் கந்தசாமி பேசுகையில், தமிழ்நாடு சட்டசபையில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை விளக்க உரையை பாரபட்ச நோக்கத்தோடு வாசித்தார். தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று மாற்றி வாசித்தார். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநரை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் 3-வது நாளாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மை எரிப்பு- வழக்கறிஞர்களும் போராட்டம்!